ஆஸி.யில் இருந்து வந்த சர்க்கரை கடத்தல்! தூத்துக்குடி:
தூத்துக்குடி: ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.7 லட்சம் மதிப்புள்ள 31 டன் சர்க்கரையை கடத்திய லாரி டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியை சேர்ந்த சுந்தரகிருஷ்ணன் தனது நிறுவனத்திற்கு 41,000 டன் சர்க்கரையை ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்தார்.
இந்த மூட்டைகள் 19ம் தேதி நள்ளிரவு ஏகன் என்ற கப்பலில் தூத்துக்குடி துறைமுகத்திற்கு வந்தன.
இங்கிருந்து புதியம்புத்தூரில் உள்ள சுந்தரகிருஷ்ணனுக்கு சொந்தமான குடோனுக்கு லாரிகளில் சர்க்கரை மூடைகள் அனுப்பப்பட்டன.
ஆனால், குடோனில் மூடைகளை கணக்கிட்டபோது அதில் 31 டன் மூட்டைகள் மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து குடோன் மேலாளர் போலீசில் புகார் செய்தார்.
போலீசார் நடத்திய விசாரணையில் விளாத்திகுளம் அருகேயுள்ள வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் ஓட்டி வந்த லாரியிலிருந்து 31 டன் சர்க்கரை மூடைகளை புதூர் பாண்டியாபுரம் விலக்கு அருகே உள்ள ஒரு குடோனுக்கு கடத்தியிருப்பது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.7 லட்சமாகும்.
இதை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.