வரதட்சணை வழக்கு-அதிமுக எம்பி செம்மலை விடுவிப்பு
சேலம்: மருமகள் தொடர்ந்த வரதட்சணைக் கொடுமை வழக்கில் இருந்து, சேலம் அதிமுக எம்பி செம்மலை மற்றும் அவரது மனைவி, மகன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் போலீஸ் துணை கண்காணிப்பாளர் முத்துசாமி. இவரது மகள் வாணி பிரிதா .
இவருக்கும், சேலம் எம்.பி. செம்மலையின் மூத்த மகன் எழில் அமுதனுக்கும் கடந்த 2004ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இந் நிலையில் வாணி பிரிதா, மேட்டூர் போலீஸில் கடந்த 26.1.2007 அன்று ஒரு புகார் அளித்தார். அதில் தனது கணவர் எழில் அமுதன், மாமனார் செம்மலை, மாமியார் புஷ்பா ஆகியோர் தன்னிடம் வரதட்சணைக் கேட்டு கொலை மிரட்டல் விடுப்பதாகவும், வரதட்சணையாக கொடுத்த நகைகளைப் பெற்று அடமானம் வைத்து விட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.
இதன்பேரில் எழில் அமுதன், செம்மலை, புஷ்பா ஆகியோர் மீதும் மேட்டூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
பின்பு இந்த வழக்கு ஈரோட்டுக்கும், தொடர்ந்து சேலம் சூரமங்கலம் மகளிர் போலீசாருக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோபால், குற்றம்சாட்டப்பட்ட மூன்று பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டார்.