இந்தியாவில் நல்ல எதிர்காலம் - டிராகன் ஏர் நம்பிக்கை
குவாங்ஷோ (சீனா): இந்தியாவில் மார்க்கெட் நிலவரம் சிறப்பாக இருப்பதால் எதிர்காலத்தில் நல்ல வர்த்தகம் நடைபெறும் என சீனாவின் டிராகன் ஏர் விமான நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
ஹாங்காங்கைச் சேர்ந்த டிராகன் ஏர் நிறுவனம், கதே பசிபிக் குழுமத்தின் ஒரு பிரிவாகும். கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஹாங்காங் - பெங்களூர் இடையே தினசரி விமான சேவையை அது தொடங்கியது.
ஆனால் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த சேவையை பின்னர் வாரத்திற்கு நான்கு நாட்கள் என மாற்றி விட்டது. இந்த நிலையில் விரைவில் மீண்டும் இதை தினசரி சேவையாக மாற்ற டிராகன் ஏர் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேம்ஸ் டாங் கூறுகையில், இந்தியாவில் வர்த்தகம், தொழில், பொழுது போக்குப் பிரிவைச் சேர்ந்த பயணிகள் பெருமளவில் ஹாங்காங் வருகின்றனர்.
எதிர்காலத்தில் இந்தியாவில் டிராகன் ஏர் சேவைக்கு பெரும் ஆதரவும், வரவேற்பும் கிடைக்கும் என நம்புகிறோம்.
இதை மனதில் கொண்டு இந்தியாவில் எங்களது சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து யோசித்து வருகிறோம். முதலில் பெங்களூர் சேவையை விரைவில் மீண்டும் தினசரி சேவையாக்குவதே எங்களது இலக்கு என்றார்.