விமானத்தைத் தவற விட்ட பயணி விடுத்த குண்டு மிரட்டலால் பரபரப்பு
டெல்லி: டெல்லியிலிருந்து பெங்களூருக்குக் கிளம்பிய கோ ஏர் நிறுவன விமானத்தைத் தவற விட்ட பயணி அதைப் பிடிப்பதற்காக வெடிகுண்டு இருப்பதாக வதந்தி பரப்பியதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நபரைப் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது பெயர் அபினேஷ் குப்தா. மிகப் பெரிய ஐ.டி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.
டெல்லியிலிரு்நது பெங்களூர் செல்லும் கோ ஏர் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து பெங்களூர் கிளம்பி விட்ட அந்த விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திருப்பப்பட்டு தரையிறக்கப்பட்டது.
பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்ட பின்னர் விமானத்தை தனி இடத்திற்குக் கொண்டு சென்று தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
தொலைபேசி மிரட்டல் விடுத்தது யார் என்பது குறித்து விசாரணை முடுக்கி விடப்பட்டது. இதில் அபினேஷ் குப்தா சிக்கினார்.
பெங்களூர் விமானத்தில் பயணிக்கவிருந்த அபினேஷ், அதை தவற விட்டு விட்டார். இதையடுத்து அதில் பயணிக்க விரும்பி விமானத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக புரளி கிளப்பி விட்டார்.
கைது செய்யப்பட்டுள்ள அபினேஷ் மீது பீதியை உருவாக்குதல், தவறான தகவல் அளித்தல் உள்ளிட்ட 3 புகார்களின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.