காவலர் தேர்வு - மாநிலம் முழுவதும் 1.95 லட்சம் பேர் எழுதினர்
சென்னை: 4000 காவலர் பணியிடங்களை நிரப்ப இன்று நடந்த தேர்வை தமிழகம் முழுவதும் 1.95 லட்சம் பேர் எழுதினர். இவர்களில் பெரும்பாலானோர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் 2,800 ஆண் காவலர்கள் மற்றும் 1200 பெண் காவலர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கான எழுத்துத் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடந்தது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடந்த இந்தத் தேர்வை 1.95 லட்சம் பேர் எழுதினர்.
சென்னையில் 11 மையங்கள் உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எழுத்துத் தேர்வு நடந்தது.
குறைந்தபட்ச கல்வித் தகுதியே 10ம் வகுப்பு மட்டுமே. ஆனால் இன்றைய தேர்வுக்கு இளநிலை பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் உள்ளிட்டோர் வந்து குவிந்திருந்தனர்.
இன்றைய தேர்வில் வெற்றி பெறுபர்கள் அடுத்த மாதம் உடல் தகுதிக்கான தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். அதில் தேறுவோர் காவலர்களாக நியமிக்கப்படுவர். டிசம்பர் மாதம் இறுதித் தேர்வுப் பட்டியல் வெளியாகும்.