தலாய் லாமா எங்கள் விருந்தினர் - எங்கும் போக உரிமை உண்டு: மன்மோகன் சிங்

சீனப் பிரதமர் வென் ஜியாபோவை நேற்று தாய்லாந்தில் சந்தித்தார் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது அருணாச்சல் பிரதேசம் குறித்தோ, தலாய் லாமாவின் அருணாச்சல் பிரதேச பயணம் குறித்து இரு தலைவர்களும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை.
இந்த நிலையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தனது தாய்லாந்து பயணத்தை முடித்துக் கொண்ட பின்னர் ஹுவா ஹின் நகரில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது,
திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா இந்தியாவின் மதிப்புமிக்க விருந்தினர். இந்தியாவின் எந்தப் பகுதிக்கும் அவர் போகலாம். அதற்கான உரிமை, சுதந்திரம் அவருக்கு உண்டு. இதை நான் சீனப் பிரதமரிடம் தெரிவித்தேன்.
சீன பிரதமர் வென் ஜியாபோவுடன் ஆக்கப்பூர்வமான முறையில் பேச்சுவார்த்தை நடந்தது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்புக் காஷ்மீரில், சீனா அணைகள் கட்டுவது குறித்து நான் சீனத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு அவர், இதுகுறித்து நிபுணர் குழு ஆய்வு செய்யும் என்றார்.
சனிக்கிழமை காலையிலும், பின்னர் இரவு விருந்தின்போதும் வென் ஜியாபோவுடன் பேசினேன். அனைத்துப் பிரச்சினைகளும் சுமூகமான முறையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதை சீனப் பிரதமரும் ஏற்றுக் கொண்டார் என்று தெரிவித்தார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications