'பூசணிக்காய் தோட்டத்தையே சோற்றில் மறைத்த அரசு'!
சென்னை:நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி பத்திரிகையாளர்கள் தொடர்ந்த வழக்கு ஆதாரங்கள் ஏதுமில்லை என்று கூறி நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார்.
அவதூறு செய்தி தொடர்பாக நடிகர் சங்கக் கட்டட வளாகத்தில் கண்டன கூட்டம் நடத்திய நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்களை ஆபாசமாகத் தாக்கிப் பேசினர். அவதூறு செய்தி வெளியிட்ட பத்திரிகையை மட்டும் கண்டிக்காமல் பொத்தாம் பொதுவாக அனைத்துப் பத்திரிகையாளர்களையும் கேவலமான முறையில் திட்டினர். நடிகர் சூர்யா, அனைத்துப் பத்திரிகையாளர்களையும் பொத்தாம் பொதுவாக ஈனப்பயல்கள் என்றும், அவர்களை நசுக்க வேண்டும் என்றும் பேசினார்.
இன்னொரு நடிகரான விவேக்கும், எல்லா பத்திரிகைகாரர்களையும் கேவலமான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தார். பத்திரிகையாளர்களின் குடும்பத்தாரையும் ஆபாசமாகத் திட்டியவர், பத்திரிகையாளர்களின் அக்கா, அம்மா, ஆயா என அனைவரின் போட்டோக்களுக்கும் சின்ன ஜட்டி மட்டும் மாட்டி அதை போஸ்டர் அடித்து தமிழகம் எங்கும் தன் செலவிலேயே ஒட்டப் போவதாக அறிவித்தார்.
சத்யராஜ், குறிப்பிட்ட ஒரு பத்திரிகையாளரை வேசி மகன் என்று திட்டியதோடு, இதை ஆதரிக்குமாறு அனைத்து நடிகர் நடிகைகளையும் கேட்டுக் கொண்டார். 'நான் பேசிய வார்த்தையில் மாற்றமில்லை. எவன் என்னத்தைப் புடுங்குறான்னு பார்க்கலாம்!' என்று முழங்கினார் மேடையில்.
நடிகை ஸ்ரீபிரியா, சேரன், விஜயகுமார், அவர் மகன் அருண் விஜய் ஆகியோரும் ஆபாசமாகவும் வன்முறையைத் தூண்டும் விதத்திலும் பேசினர்.
இவை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களை தாக்கி பேசிய நடிகர்கள் மற்றும் நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரி பத்திரிகையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் நடிகைகள் பேசிய வீடியோ பேச்சு ஆதாரமாக தரப்பட்டது.
மேலும் தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக நடக்க அனுமதிக்காது என்று கோரி, வழக்கு விசாரணையை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற வேண்டும் என்றும் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் துரைசாமி, பத்திரிகையாளர்கள் கூறிய புகாருக்கு ஆதாரம் இல்லை என்று தெரிவித்தார்.
இப்படியொரு கண்டனக் கூட்டமே நடக்கவில்லை என்றும், நடிகர்- நடிகைகள் ஆபாசமாகப் பேசியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் போலீஸ் தரப்பில் விசாரித்து கூறப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதற்கு பத்திரிகையாளர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் புகாருக்கு ஆதாரமில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.
கண்டனக் கூட்டமே நடக்கிவில்லை என முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்ட நடிகர்கள் மற்றும் போலீசாரின் செயல் அவர்களை திகைப்புக்குள்ளாக்கியுள்ளது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய பிரஸ் கிளப் நிர்வாகியும் பத்திரிகையாளருமான அன்பு, "என்ன சொல்வதென்றே தெரியவில்லை... உண்மைகளை எந்த அளவு பொய்யாகக் காட்ட முடியும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். இனி சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு செய்துள்ளோம். அந்த மன்றத்தில் நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்" என்றார்.