கண் சிகிச்சை முகாமில் விபரீதம்- 10 பேருக்கு பார்வை போனது - 4 பேரின் கண்கள் அகற்றம்
சென்னை: ஆந்திராவில் நடந்த காடராக்ட் கண் சிகிச்சைக்குப் பின்னர் நோய்த் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்ட 4 பேரின் கண்கள் சென்னை சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் அகற்றப்பட்டது.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் இந்துக்குருபேட்டா என்ற இடத்தில் பொல்லிநெனி என்ற கண் அறக்கட்டளை மருத்துவமனை உள்ளது. பல ஆண்டு காலமாக அந்த மருத்துவமனை அங்கு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த மருத்துவமனையின் சார்பில் கடந்த 18-ந் தேதி இலவச கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது.
இதில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்ற 30 பேருக்கு கண்ணில் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு பார்வை மங்க தொடங்கியது. பின்னர் அவர்களுடைய பார்வை முழுவதுமாக பறி போனது.
அதைத் தொடர்ந்து அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 2 கண்களையும் அகற்றாவிட்டால் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என்று எச்சரித்தனர்.
அதைத் தொடர்ந்து ஆந்திர கண்சிகிச்சை முகாமில் தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்ட 10 பேர் நேற்று முன்தினம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டனர். நுங்கம்பாக்கம் சங்கர நேத்ராலயா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 6 பேர் பெண்கள் ஆவார்கள். அனைவரும் 40 வயதை கடந்தவர்கள்.
காதர் பாஷா, ஈஸ்வரய்யா, கவுசிகா, கொண்டம்மா, சாலம்மா, மும்தாஜ் பேகம், ஜானிக் பாஷா, சுப்பம்மா, மஸ்தானம்மா, கோபால் ரெட்டி ஆகியோரில் நான்கு பேருக்கு தலா ஒரு கண் அகற்றப்பட்டது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் சென்னை மருத்துவமனையில் குவிந்துள்ளனர்.
சென்னையைப் போல விஜயவாடாவிலும் பலரை சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
மருத்துவமனைக்கு தடை...
இந்தநிலையில், பலரின் கண் பார்வை பாதிப்புக்கு காரணமான பொல்லிநேனி மருத்துவமனைக்கு கண் அறுவைச் சிகிச்சை செய்ய நெல்லூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தடை விதித்துள்ளார்.












Click it and Unblock the Notifications