திருத்துறைப்பூண்டி கோயிலில் கொள்ளைபோன ரூ.50 கோடி மரகதலிங்கம் மீட்பு

இது குறித்து சிலைகள் தடுப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி திலகவதி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சோழர்கள் காலத்தில் வேதாரண்யம், திருக்குவளை, திருக்கரவாசல், திருவாரூர், திருநள்ளாறு, நாகப்பட்டினம், திருவாயுமூர் ஆகிய 7 இடங்களில் உள்ள கோவில்களில் விலைமதிப்பற்ற மரகத லிங்கங்கள் நிறுவப்பட்டன.
இவற்றில் நாகப்பட்டினத்தில் உள்ள நீலாயதாட்சி அம்மன் திருக்கோயிலின் கோமேதக லிங்கம் 1992ம் ஆண்டு திருடு போனது. அதே ஆண்டில் திருவாரூர் தியாகராஜ சுவாமி திருக்கோயிலிலும் மரகத லிங்கம் திருடப்பட்டன. இவை இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
இந் நிலையில் திருத்துறைப்பூண்டி கோயிலில் இருந்த மரகதலிங்கம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19ம் தேதி கொள்ளை போனது.
இது தொடர்பாக டிஎஸ்பி செல்வராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் காதர் பாட்சா உள்ளிட்டோரைக் கொண்ட தனிப் படையினர் விசாரித்து வந்தனர். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந் நிலையில் பட்டுக்கோட்டையை சேர்ந்த சிலர் சென்னை கோயம்பேட்டுக்கு மரகதலிங்கம் விற்பனை செய்ய வருவதாக தகவல் கிடைத்தது.
அங்கு விரைந்த தனிப்படையினர் பட்டுக்கோட்டையை சேர்ந்த ரமேஷ் (30), வலங்கைமானை சேர்ந்த செந்தில் (29) ஆகியோரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்த மரகதலிங்கம் மீட்கப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த லிங்கம் திருத்துறைப்பூண்டி கோயிலில் கொள்ளை போன மரகதலிங்கம் தான் என்பதை அந்தக் கோயிலின் குருக்களும், நிர்வாகத்தினரும் உறுதி செய்துள்ளனர். இதன் மதிப்பு சுமார் ரூ.50 கோடி.
கைது செய்யப்பட்ட ரமேஷ் போலீஸ் ஜீப்பை எரிக்க முயன்ற வழக்கில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டவன். செந்தில் ஒரு கொலை வழக்கில் அதே சிறையில் இருந்தவன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறையிலிருந்து வெளியே வந்த பின் இருவரும் சிலை திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர். கேஸ் சிலிண்டரை வெட்டி அதில் தான் இவர்கள் மரகதலிங்கத்தை மறைத்து வைத்திருந்தனர்.
இந்த கொள்ளையில் இவர்களுக்கு மேலும் 4 கூட்டாளிகள் உதவியிருக்கலாம். அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார் திலகவதி.












Click it and Unblock the Notifications