கழுத்தை நெரித்து கொள்ளை: பேசும் சக்தி இழந்த பெண்- இதுவரை 3 பேர் கைது
சென்னை: கொள்ளையர்களால் கழுத்து நெரிக்கப்பட்ட பெண் பேச முடியாமல் தவித்து வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக கர்ப்பிணி பெண் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை குமரன் நகர் ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்தவர் சந்துரு. சாப்ட்வேர் என்ஜினீயர். இவரது மனைவி சுபஸ்ரீ. இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகன் உள்ளான்.
சம்பவத்தன்று சுபஸ்ரீ வீட்டில் தனியாக இருந்தபோது, அவரது பள்ளி தோழி முத்தரசி தனது கணவர் சரவணனுடன் வந்தனர். அவரது நண்பர்கள் 2 பேரும் வந்திருந்தனர். முத்தரசி 7 மாத கர்ப்பிணி ஆவார்.
சுபஸ்ரீயுடன் பேசிக் கொண்டிருந்தபோது, வீட்டில் உள்ள நகை மற்றும் பணம் பற்றிய விவரத்தை முத்தரசியும் சரவணனும் தெரிந்து கொண்டனர். அப்போது முத்தரசி தனக்கு சீமந்தம் நடைபெற இருப்பதாகவும் நகை- பணம் கொடுத்து உதவுமாறும் கேட்டார். அதற்கு சுபஸ்ரீ மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த முத்தரசி, சரவணன் ஆகியோர் சேர்ந்து சுபஸ்ரீயின் கழுத்தில் துப்பட்டாவை போட்டு நெரித்தனர். உடன் வந்த 2 பேர் சுபஸ்ரீ கை, கால்களை ஆட்டாதவாறு பிடித்துக் கொண்டனர். இதில் சுபஸ்ரீ மயக்கமடைந்தார்.
உடனே அவர் இறந்துவிட்டார் என கருதிய 4 பேரும் அவரது கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்க சங்கிலியையும், பீரோவில் இருந்த 30 பவுன் நகைகளையும் ரூ.15 ஆயிரம் பணத்தையும் அள்ளிக் கொண்டு தப்பி சென்று விட்டனர்.
உயிருக்கு போராடிய சுபஸ்ரீயை சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். நான்கு நாட்கள் மயக்க நிலையில் இருந்த சுபஸ்ரீக்கு அவ்வப்போது நினைவு வருகிறது.
ஆனால் அவரால் பேச முடியவில்லை. குரல் வளையில் முறிவு ஏற்பட்டுள்ளதால் பேச்சு வராமல் அவதிப்படுகிறார்.
சுபஸ்ரீ வீட்டில் கைவரிசை காட்டிய முத்தரசியை போலீசார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் நேற்று கொள்ளைக்கு உடந்தையாக இந்த வினோத் (22), ஆனந்த் (21) ஆகிய 2 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர்.
சரவணன் போலீசில் சிக்காமல் தப்பி வருகிறார். அவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.












Click it and Unblock the Notifications