மணிப்பூர் பெண் கற்பழித்து கொலை- ஐஐடி ஆய்வு மாணவர் கைது
டெல்லி: மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணைக் கற்பழித்துக் கொலை செய்ததற்காக டெல்லி ஐஐடியில் பி.எச்.டி ஆய்வு மாணவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
அந்தப் பெண்ணைக் கற்பழித்துக் கொன்றதோடு நில்லாமல், உடலை எரிக்கவும் அந்த மாணவர் முயன்றுள்ளார். பாதி எரிந்த நிலையில் உடலை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.
சனிக்கிழமை மாலையில், தெற்கு டெல்லியில் உள்ள முனிர்கா என்ற இடத்தில் வசித்து வரும் தமிலா என்பவர் வேலைக்குப் போய் விட்டு வீடு திரும்பியபோது, தனது தங்கை ராம்சன்பி ஹோங்காராய் (21), சமையல் அறையில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்ததைப் பார்த்து திடுக்கிட்டார்.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் நடத்திய விசாரணையில், ஹோங்க்ரே கற்பழித்து எரித்துக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று சந்தேகித்தனர்.
இதையடுத்து நடந்த தீவிர விசாரணையில், டெல்லி ஐஐடியில் ஆய்வு மாணவராக இருக்கும் 34 வயதான புஷ்பம் குமார் சின்ஹா என்பவர் சிக்கினார்.
இவர்தான் ஹோங்க்ரேவை சமயலறையில் வைத்துக் கற்பழித்துக் கொலை செய்து பின்னர் உடலை எரித்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
தமிலா வீட்டுக்கு அடுத்த வீட்டில்தான் சின்ஹா வசித்து வருகிறார்.
அலகாபாத் மண்டல பொறியியல் கல்லூரியில் பிடெக் முடித்தவரான சின்ஹா, பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தில் எம்.எஸ்.சி. முடித்துள்ளார். தற்போது டெல்லி ஐஐடியில் பி.எச்.டி செய்து வந்தார்.
ஹோங்க்ரே மற்றும் அவரது சகோதரியை சின்ஹாவுக்கு முன்பே தெரியுமாம். அடிக்கடி அவர்களது வீட்டுக்குப் போய் வருவது வழக்கம். சனிக்கிழமை மாலையும் சென்ற அவர் ஹோங்க்ரேவை அடைய முயன்றுள்ளார். அவர் மறுக்கவே கற்பழித்துள்ளார். பின்னர் கழுத்தை நெரித்துக் கொலை செய்து விட்டார்.