இது சேனாவின் தோல்வி அல்ல, மராட்டியர்களின் தோல்வி- உத்தவ்
சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு முதல் முதலாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,
இந்தத் தேர்தல் தோல்வி கட்சியின் தோல்வி அல்ல. மராட்டியர்களின் தோல்வி. சிவசேனா கட்சி 40 வருடங்களுக்கு முன்பு மராட்டியர்களுகாக ஆரம்பிக்கபட்டது. கட்சியின் ஒவ்வொரு செயலும் மராட்டியர்களின் நலனை மனதில் கொண்டது.
ஆட்சியிலிருந்த போது மாநிலம் முழுவதும் உள்கட்டமைப்புகளில் சிறப்பாக பணி புரிந்ததோம். எங்களின் இந்தப் பணியைத் தான், காங்கிரஸ் தான் செய்தாகக் கூறிக் கொண்டு 10 வருடங்களை கடத்தி விட்டது.
பத்து வருடங்களில் காங்கிரஸ் மக்களுக்காக ஒன்றுமே செய்யவில்லை. இம்முறை கட்சியின் தோல்விக்கு நாங்கள் யாரையும் குறைகூற விரும்பவில்லை. இந்தத் தோல்வியை ஏற்றுக் கொள்கிறோம்.
அதே நேரத்தில் கட்சியின் அனைத்து மட்டத்திலும் பெரும் மாற்றங்கள் கொண்டு வரப்படும், எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த பூசலும் இல்லை.
நாங்கள் இருவரும் இனைந்து நல்ல எதிர்கட்சியாக சட்டமன்றத்தில் பணியாற்றுவோம். எங்களை தேர்தெடுத்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்காக உழைத்த அனைத்து தொண்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இந்தத் தோல்வி மூலம் மகாராஷ்டிரத்தை மக்கள் நரகத்துக்குள் தள்ளிவிட்டுவிட்டார்கள் என்று பால் தாக்கரே கூறிய கருத்து சரிதான். மக்கள் இந்த தேர்தலில் தவறிழைத்து விட்டது உண்மை தான் என்றார்.
அசோக் சவானின் கரிஷ்மா (அற்புதம்) ஏதாவது மக்களை கவர்ந்து விட்டதா என்று அவரிடம் கேட்டதற்கு,
அப்படி ஒன்றும் கரிஷ்மாவும் இல்லை அல்லது கரீனாவும் இல்லை. ஓட்டுக்கள் சிதரியதால் காங்கிரஸ் பயனடைந்து இருக்கிறது. மும்பையில் மட்டும் தான் சிவசேனா லேசாக பின்னடைவு அடைந்திருக்கிறது. ஆனால் மராட்டியத்தில் உள்பகுதியில் ஆதரவு அதிகரிக்க துவங்கியுள்ளது என்றார்.
முன்னதாக மும்பை கோரேகாவ் தொகுதியில் வென்ற வேட்பாளர் சுபாஷ் தேசாய் சட்டமன்ற சிவசேனா கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கபட்டார்.