ராகு-கேது பெயர்ச்சி: கோவில்களில் சிறப்பு பூஜை
கும்பகோணம்: ராகு, கேது பெயர்ச்சி இன்று நடந்தது. இதையொட்டி ராகு தலமான திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திரு நாகேசுவரம் நாகநாதசுவாமி கோவில் (ராகுதலம்) உள்ளது. இந்த கோவிலின் வெளி பிரகாரத்தில் ராகு பகவான் தனது இரு தேவியருடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.
நாகதோஷமும், ராகு தோஷமும் உள்ளவர்கள் இங்கே வந்து வழிபாட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
இக்கோவிலில் ராகு பகவான், மகரராசியில் இருந்து தனுசு ராசிக்கு இன்று காலை 9.04 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
ராகு பெயர்ச்சியை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு 4-ம் கால பூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு யாக சாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் ராகுபகவான் தனது இரு தேவியர்களான ஜேஷ்டா தேவி, கஜலட்சுமி ஆகியோருடன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
இதையொட்டி அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் குவிய தொடங்கியது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராகு பெயர்ச்சி விழாவில் கலந்து கொண்டனர்.
கேது பெயர்ச்சி...
நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த கீழ பெரும்பள்ளத்தில் நாகநாத சுவாமி (கேது தலம்) உள்ளது. நவக்கிரகங்களில் முதன்மை வாய்ந்த மூர்த்தியாக விளங்கும் கேது பகவான் இக்கோவிலில் தனி சன்னதி கொண்டு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கேது பகவானுக்கு உரிய பரிகார தலமாக இக்கோவில் விளங்கி வருகிறது.
இக்கோவிலில் இன்று காலை 9.06 மணிக்கு கேது பகவான், கடக ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
கேது பெயர்ச்சியை முன்னிட்டு இன்று காலை 6 மணிக்கு ஜெபஹோமமும், குபேர தனாஹர்ஷன ஹோமமும் நடைபெற்றது. 7 மணிக்கு விநாயகர், சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது.
அதை தொடர்ந்து மகா பூர்ணாகுதியும் சுவாமிக்கு மகா அபிஷேகமும் நடந்தது. 9.06 மணிக்கு கேது பகவானுக்கு மகா தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்தனர். கொட்டும் மழையிலும் பக்தர்கள் வரிசையில் நின்று கேது பகவானை தரிசித்தனர்.
காஞ்சி கோவிலில் பரிகார பூஜை...
ராகு, கேது பெயர்ச்சி விழாவை முன்னிட்டு காஞ்சிபுரம் கைலாச நாதர் திருக்கோயிலில் சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் தலைமையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்ற பரிகார பூஜைகள் நடைபெற்றன.
ராகு, கேது பெயர்ச்சியை முன்னிட்டு பல்வேறு ராகு, கேது ஸ்தலங்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், பரிகார பூஜைகளும் நடைபெற்றன.