மலேசியாவில் பாலம் இடிந்தது- 22 குழந்தைகள் ஆற்றில் மூழ்கி பலி
கோலாலம்பூர்: மலேசியாவில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் அதன் மீது சென்று கொண்டிருந்த 22 பள்ளிச் சிறார்கள் ஆற்றில் விழுந்து உயிரிழந்தனர்.
உயிரிழந்த குழந்தைகள் அனைவரும் 13 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர். இந்த விபத்தில் பல தமிழ்க் குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட 20 குழந்தைகள் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 22 பேரை மட்டும் காணவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உயிர் தப்பிய 12 வயது சிறுவன் மதிவாணன் கூறுகையில், இந்தப் பாலத்தின் சுவர் பழுதடைந்து காணப்பட்டது. அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்ததில், பாலத்தின் மீது இருந்த பல சிறுவர்கள் ஆற்றில் விழுந்து விட்டனர்.
நானும் ஆற்றில் விழுந்து விட்டேன். ஆனால் எனக்கு ஒரு கயிறு கிடைக்கவே அதை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தேன். பின்னர் என்னை மீட்டனர். ஆற்றில் நீரோட்டம் வேகமாக இருந்ததால் பலர் அடித்துச் செல்லப்பட்டனர். மிகுந்த சிரமப்பட்டு நான் தப்பியுள்ளேன் என்றான்.
விபத்து நடந்த இடம் வடக்கு பேரக் மாகாணத்தில் உள்ளது. அங்குள்ள கம்பார் ஆற்றின் அருகே உள்ள ஒரு கிராமத்தில் மாணவர்களின் முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட சிறார்கள் இதில் பங்கேற்றிருந்தனர். இந்த சம்பவத்தால் மலேசியாவில் சோகம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications