அழகு திருநாவுக்கரசை விடுவிக்க சிபிஐ எதிர்ப்பு
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ரூ. 2 கோடிக்கு பரிசுக் காசோலை வந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசுவை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கூடாது என்று சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.
ஜெயலலிதா ரூ.2 கோடிக்கு பரிசு வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் அழகு திருநாவுக்கரசு மீதும் சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி ஏற்கனவே ஜெயலலிதா மனுத் தாக்கல் செய்துள்ளார். இதை நிராகரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்துள்ளது.
அதேபோல, தற்போது அழகு திருநாவுக்கரசையும் வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது என்று கோர்ட்டில் சி.பி.ஐ. நேற்று பதில் மனு தாக்கல் செய்தது.
ரூ.25 லட்சத்து 50 ஆயிரத்துக்கு எடுத்த வங்கி டிராப்டை அழகு திருநாவுக்கரசு, ஜெயலலிதாவுக்கு கொடுத்துள்ளதால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கக்கூடாது. 3 ஆண்டுகள் காலம்தாழ்த்தி மனு செய்யப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கோரிக்கையை ஏற்கக் கூடாது என்று சி.பி.ஐ. தனது பதில் மனுவில் கூறியிருந்தது.
இதை விசாரித்த சென்னை சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டு நீதிபதி முகமது இசாத் அலி வழக்கு விசாரணையை அடுத்த நவம்பர் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications