கூடுதல் நேர மின்தடை-தொழிற்சாலைகள் பாதிப்பு
செங்கோட்டை: அறிவிக்கப்படாத மற்றும் கூடுதல் நேர மின்தடையால் ஆலங்குளம், செங்கோட்டை மற்றும் பாவூர்சத்திரம் வட்டாரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட மரம் அறுப்பு மில்கள் மற்றும் அரிசி ஆலைகளில் பணிகள் பெரிதும் பாதிககப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் நாள் ஒன்றுக்கு குறிப்பிட்ட நேரம் குறிப்பிட்ட பகுதியில் சுழற்சி முறையில் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆலங்குளம் மற்றும் சுற்று வ்ட்டார பகுதிகளில் மாலை 4 மணி முதல் 6 மணி வரை மின்தடை நடைமுறையில் இருக்கிறது. இதிலும் பல நாட்கள் 7 மணி நேரம் என மின்தடை அறிவிக்கப்படாமல் 3 மணி நேரம் மின்தடை செய்யப்பட்டது.
ஆனால், தற்போது எவ்வித அறிவிப்பும் இன்றி கடந்த சில நாட்களாக காலை 6 மணி முதல் 8 மணி வரை அல்லது 8.30 மணி முதல் குறிப்பிட முடியாத நேரம் வரை மின்தடை செய்யப்படுகிறது. இதனால் எந்த வேலையும் முழுமையாக செய்ய முடியுமா, எப்போது மின் சப்ளை வரும் அல்லது துண்டிக்கப்படும் என பொதுமக்கள் புலம்பும் நிலை உள்ளது.
மேலும் ஆலங்குலம், பாவூர்சத்திரம், செங்கோட்டை பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மரம் அறுப்பு சாமில்களும், அரிசி ஆலை உற்பத்திகளும் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மரம் அறுப்பு தொழிலாளர்கள் கூறும்போது நெல்லை மாவட்டத்தின் மேற்கு பகுதியில் தான் அதிகமா சாமில்கள் உள்ளன. தூத்துக்குடிக்கு வெளிநாட்டில் இருந்து வரும் மரங்கள் இங்கு கொண்டு வரப்பட்டு அறுப்பு பணி முடிந்து கேரளா, ஆந்திரா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. எங்களுக்கு நாள் கூலியாக ரூ. 100 முதல் ரூ. 225 வரை வழங்கப்படுகிறது. ஆனால் மின் தடையால் வேலையில் கடுமையாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றனர்.