மாவோயிஸ்டுகள்-மமதா கூட்டுச் சதி: சிபிஎம்
கொல்கத்தா: மாவோயிஸ்ட் நக்சலைட்டுகளுடன், மமதா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கை கோர்த்துக் கொண்டு, மேற்கு வங்க இடதுசாரி அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் நடந்த ரயில் கடத்தல் சம்பவம் அதற்கு நல்ல உதாரணம் என்று கூறியுள்ளார் சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மேற்கு வங்க மாநிலத்தில் மாவோயிஸ்டுகளுடன் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கரம் கோர்த்து செயல்படுகிறது. அவர்களைக் காப்பாற்ற அது துடிக்கிறது.
மாவோயிஸ்டுகளை ஒடுக்க மத்திய அரசு படைகளை அனுப்ப முடிவு செய்திருந்த நிலையில் அதை மமதா பானர்ஜி எதிர்த்துள்ளார், தடுத்துள்ளார். மத்திய அமைச்சர்களுக்கு இப்படி ஒரு அதிகாரம் இருக்கிறதா என்பதை பிரதமர் விளக்க வேண்டும்.
ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கடத்தல் சம்பவத்தில் திரிணமூல் காங்கிரஸின் சதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மமதா பானர்ஜியும், அவரது கட்சியினரும் லால்கரில் நடந்த போலீஸ் நடவடிக்கையை எதித்தனர். மேலும், புற ராணுவப் படையினர் வெளியேற வேண்டும் எனவும் வற்புறுத்தினர்.
இவையெல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது மாவோயிஸ்டுகளைத் தூண்டி விட்டு வருவது திரிணமூல் காங்கிரஸ்தான் என்பது தெளிவாகும். அவர்களுடன் கை கோர்த்துக் கொண்டு, மேற்கு வங்க அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது திரிணமூல் காங்கிரஸ்.
மாவோயிஸ்டுகளை அரசியல் ரீதியாக எதிர்த்து வந்த 65 சிபிஎம் தொண்டர்கள் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கொல்லப்பட்டுள்ளனர். ஆனால் வேறு கட்சிகளைச் சேர்ந்த யாரையும் இவர்கள் கொல்லவில்லை.
மாவோயிஸ்டுகள் பெருமளவில் பயன்படுத்தி வரும், லால்கர் பகுதியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் காவல்துறை அடக்குமுறைக்கு எதிரான மக்கள் கமிட்டி அமைப்பினர்தான் ராஜ்தானி எக்ஸ்பிரஸையும் கடத்தியுள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில் ஆதாயம் அடைய மாவோயிஸ்டுகளின் உதவியை நாடியுள்ளார் மமதா பானர்ஜி. அதனால்தான் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப் படையினரை செயல்பட விடாமல் தடுக்க முனைகிறார் என்று குற்றம் சாட்டினார் பிரகாஷ் காரத்.