ஒரே நிலத்தை இருவருக்கு விற்று ரூ.40 லட்சம் சுருட்டிய புது இயக்குநர்!
சென்னை: தங்களுக்குள் இருக்கும் இருட்டைத்தான் இன்றைய இயக்குநர்கள் சிலர் திரையில் காட்டுகிறார்கள் போலிருக்கிறு.
சென்னையைச் சேர்ந்த அறிமுக திரைப்பட இயக்குநர் தனக்குச் சொந்தமான ஒரே நிலத்தை இரண்டு வெவ்வேறு நபர்களுக்கு மோசடியாக விற்று ரூ. 40 லட்சம் சுருட்டியுள்ளார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்தவர் மூர்த்தி. செங்கல்பட்டு அருகே பட்டிபுலம் என்ற கிராமத்தில் 2 கிரவுண்டு நிலத்தை முத்துக்குமார் என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார். அதே நிலத்தை மூர்த்திக்குத் தெரியாமல் சுகுமார் என்பவருக்கும் பவர் பத்திரம் கொடுத்து, அதன்மூலம் பலருக்கும் விற்று முத்துக்குமார் மிகப்பெரிய மோசடி செய்து விட்டார். ரூ.40 லட்சம் மதிப்புள்ள அந்த நிலம் மோசடி மூலம் அபகரிக்கப்பட்டுள்ளதாக மூர்த்தி புகார் தந்துள்ளார்.
இந்த புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.
துணை கமிஷனர் ஸ்ரீதர், உதவி கமிஷனர் சுந்தர்ராஜன் ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் அண்ணாமலை ஆழ்வார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து முத்துக்குமார் நேற்று கைது செய்யப்பட்டார். சென்னை போரூர் காரப்பாக்கத்தை சேர்ந்த, இவர் ஆயுதகுவியல் என்ற பெயரில் புதுமுகங்களை வைத்து படம் இயக்கி வருகிறாராம். இந்தப் படத்துக்கு பாடல்கள் பதிவு செய்யப்பட்டு விட்டதாகவும், விசாரணையின் போது முத்துக்குமார் தெரிவித்துள்ளார்.
தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முத்துக்குமார்.