மதுரை கண்டனக் கூட்டம்- திமுக திடீர் ஒத்திவைப்பு

முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பாக வனப்பகுதியில் ஆய்வு நடத்துவதற்கு மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி வழங்கினார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் மதுரையில் நவம்பர் 1-ந்தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தி.மு.க. அறிவித்திருந்தது.
இந்த நிலையில் டெல்லியில் திடீரென மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜாவின் அலுவலகங்களில் அதிரடி சிபிஐ சோதனைகள் நடைபெற்றன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தச் சூழ்நிலையில் ஜெய்ராம் ரமேஷைக் கண்டித்து என்று கூறப்பட்டதை மாற்றி கேரள அரசுக்குக் கண்டனம் என்று பெயர் மாற்றியது திமுக. தற்போது இந்தக் கூட்டத்தையே தள்ளி வைத்து விட்டது.
இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முல்லைப் பெரியாறு புதிய அணை கட்டுவதற்கு கேரள அரசு மேற்கொண்டு வரும் முயற்சிக்கு தமிழகம் காட்டும் எதிர்ப்பின் அடையாளமாக நவம்பர் 1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மதுரையில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்துவது என்றும், அதில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உரையாற்றுவது என்றும் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
முல்லைப் பெரியாறு புதிய அணை சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கில், தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணை உறுதியாக இருக்கிறது எனறும், புதிய அணை கட்டத் தேவையில்லை என்றும் தமிழக அரசு வாதாடி வருகிறது.
மத்திய அரசின் வக்கீலும் இந்த வழக்கு விசாரணையில் கலந்துகொண்டு, ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், முல்லைப் பெரியாறு அணை உறுதியாக உள்ளது என்று கூறியிருப்பதையே தற்போதும் வலியுறுத்துவதாக எடுத்துரைத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதை கருத்தில் கொண்டு மதுரையில் நவம்பர் 1-ந்தேதி நடத்துவதாக திட்டமிட்டிருந்த பொதுக்கூட்டத்தை ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications