அமிதாப்-ராஜ் தாக்கரே 'பாய் பாய்'!
மும்பை: ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்டுள்ள ஹரீஷ்சந்திராச்சி பேக்டரி மராத்தி படம் ஆஸ்கர் விருது பெற உழைக்கப் போவதாக அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.
அமிதாப்பின் இந்த அறிவிப்பை, வட இந்தியர்களுக்கு எதிராக - அமிதாப்புக்கு எதிராகவும்தான்- போராட்டம் நடத்தி வரும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனா கட்சி வரவேற்றுள்ளது.
பரேஷ் மொகாஷி இயக்கத்தில் உருவான படம் ஹரீஷ்சந்திராச்சி பேக்டரி. இந்தியாவின் முதல் பொழுதுப் போக்குப் படமான ராஜா ஹரீஷ்சந்திராவை, தாதா சாஹேப் பால்கே எவ்வளவு சிரமத்திற்கு மத்தியில் உருவாக்கினார் என்பதை விளக்கும் டாக்குமென்டரிப் படம் இது.
இப்படம் இந்தியாவின் சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஆஸ்கர் விருது பெற தான் பிரசாரம் செய்யப் போவதாகவும், உழைக்கப் போவதாகவும் அமிதாப் பச்சன் அறிவித்துள்ளார்.
இதை ராஜ் தாக்கரே கட்சி வரவேற்றுள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஷிரீஷ் பார்கர் கூறுகையில், ஆஸ்கர் விருது பெற மராத்தி படத்துக்காக பாடுபடப் போவதாக அமிதாப் பச்சன் அறிவித்துள்ளதை வரவேற்கிறோம், இது பாராட்டுக்குரியது என்றார்.
கடந்த ஆண்டுதான் அமிதாப் பச்சனை வறுத்தெடுத்தது ராஜ் தாக்கரே கட்சி. அவர் மகாராஷ்டிராவை விட உ.பி மீதுதான் அதிக பாசம் காட்டுகிறார், விசுவாசமாக இருக்கிறார் என்று நக்கலடித்திருந்தது ராஜ் தாக்கரே கட்சி.
மேலும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமிதாப் பச்சனுக்கு எதிராக போராட்டங்களிலும் குதித்தனர். மகாராஷ்டிராதான் பச்சனுக்கு புகழையும், பணத்தையும் கொடுத்தது. ஆனால் மகாராஷ்டிராவை புறக்கணிக்கிறார் பச்சன் என்று கூறி போராட்டம் நடத்தினர். அமிதாப் பச்சன் பட போஸ்டர்களையும் கிழித்தனர்.
இதையடுத்து பத்திரிக்கையாளர்களைக் கூட்டி மன்னிப்பு கேட்டார் பச்சன். தனது பிளாக்கிலும் இதுகுறித்து எழுதினார். அதன் பிறகே அமைதி திரும்பியது.
இந்த நிலையில், ஹரீஷ்சந்திராச்சி பேக்டரி படம் விருது பெறுவற்காக உழைக்கப் போவதாக அமிதாப் பச்சன் கூறியுள்ளதை வரவேற்று அவரைப் புகழ்ந்துள்ளது ராஜ் தாக்கரே கட்சி.