திருமணத்தில் முடிந்த ராங் நம்பர் காதல்!
கள்ளக்குறிச்சி: செல்போனில் ஏற்பட்ட ராங் நம்பர் காரணமாக இளம் பெண்ணிற்கும், வாலிபருக்கும் இடையே ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலத்தில் வசிப்பவர் முத்து. இவரது மகன் ராமமூர்த்தி. இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு தனது செல்மூலம் தனது உறவினருக்கு பேச முயன்றபோது, அது தவறுதலாக கள்ளக்குறிச்சி அடுத்த அலம்பளம் கதிர்வேல் என்பவரின் மகள் அபிராமியின் செல்லுக்கு இணைப்பு கிடைத்து பேசினார்.
இந்த திடீர் பேச்சு, தொடர்ந்தது. இதையடுத்து இவர்கள் இருவரும் நேரில் பார்க்காமலே காதல் கோட்டை பணியில் தங்களது காதலை செல்போன் மூலம் வளர்த்து வந்தனர்.
தீபாவளி விடுமுறைக்கு சொந்த ஊருக்கு வந்த ராமமூர்த்தியும், அபிராமி கள்ளக்குறிச்சியில் உள்ள கூல்டிரிங்ஸ் கடையில் சந்தித்தனர்.
இந் நிலையில், அபிராமியின் தந்தை இறந்துவிடவே அவரது காதல் விவகாரம் உறவினர்களுக்குத் தெரியவந்தது.
காதலி்ன் தீவிரத்தை உணராத அவர்கள் ராமமூர்த்தியை சந்தேகப்பட்டனர். அபிராமியை அவர் ஏமாற்றுவதாக நினைத்தனர்.
இந் நிலையில் ராமமூர்த்தி நேற்று மாலை கள்ளக்குறிச்சிக்கு வந்தபோது, அவரை சுற்றி வளைத்த அபிராமியின் உறவினர்கள், மகளிர் போலீஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விஷயம் தெரிந்து ஓடி வந்த அபிராமி தங்களின் காதலை போலீசாரிடம் எடுத்துக் கூறவே காவல் நிலையம் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் போலீசார் முன்னிலையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications