மராத்தி.. ராஜ் தாக்கரே வழியில் சிவசேனா!
மும்பை: ராஜ் தாக்கரேவால் பெரும் அடி வாங்கியுள்ள நிலையில் ராஜ் தாக்கரே வழியில் செல்ல முடிவெடுத்து விட்டது சிவசேனா. மும்பையில் அனைத்து கடைப் பெயர்கள், விளம்பரப் பலகைகளில் மராத்தி மொழியே பிரதானமாக இருக்க வேண்டும் என சிவசேனா கையில் உள்ள மும்பை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்த மும்பை மாநகராட்சியின் கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கான தலைமை ஆய்வாளர் பிறப்பித்துள்ள உத்தரவில், கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் மராத்தி மொழியே பிரதானமாக இருக்க வேண்டும்.
மராத்தியில் இடம் பெயரும் பெயருக்குப் பின்னர்தான் பிற மொழிகளில் பெயர்களை இடம் பெற வைக்கலாம்.
இந்த உத்தரவை 60 நாட்களுக்குள் நிறைவேற்ற வேண்டும். இதை செய்யத் தவறுவோருக்கு அதிகபட்சம் ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.
தற்போதும் மும்பையில் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் மராத்தியில்தான் பெயர்கள் உள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் பெரிதாக போட்டு விட்டு தம்மாத்தூண்டு சைஸில் மராத்தி பெயர்களை போட்டு வைத்துள்ளனர்.
இப்படித்தான் முன்பு மராத்தியில்தான் பெயர்கள் இடம் பெற வேண்டும் என ராஜ் தாக்கரேவின் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போது ராஜ் தாக்கரே வழியில் சிவசேனாவும் களம் இறங்கியுள்ளது.