போன் திருட்டு: தனியார் நிறுவன எம்.டி கைது!
டெல்லி: விமான நிலையத்தில் சக பயணியின் பிளாக்பெர்ரி போனை திருடியதாக, இந்துஸ்தான் நேஷனல் கிளாஸ் இன்டஸ்டிரீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சொமானி கைது செய்யப்பட்டார்.
திங்கள்கிழமை என்.கே.பூரி என்பவர் மும்பை செல்வதற்காக, டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தார். பாதுகாப்பு பரிசோதனை நடந்த சமயத்தில், தனது பிளாக்பெர்ரி போனை பூரி தவறவிட்டுவிட்டார். உடனடியாக காலை 6மணிக்கே அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், போலீசார் சிசிடிவி கேமரா பதிவுகளை அலச முடிவு செய்தனர். கேமராவில் பதிவான படங்களை பார்த்தபோது, செக்யூரிட்டி செக்கிங் பாயிண்ட்டில் உள்ள ட்ரேயில் இருந்த பூரியின் பிளாக்பெர்ரி போனை, கோட் அணிந்த ஆசாமி ஒருவர் எடுத்துக் கொண்டு, சென்னை விமானத்தை நோக்கி செல்வது தெரிந்தது.
பின்னர், சம்பந்தப்பட்ட ஏர்லைன் நிறுவனத்தை போலீசார் தொடர்பு கொண்டு பயணிகளின் தகவல்களை முடிந்தவரை சேகரித்தனர். கேமராவில் பதிவாகியிருந்த கோட் ஆசாமியின் பெயர் சஞ்சய் சோமானி என்பதை ஆரம்ப கட்டத்திலேயே போலீசார் கண்டுபிடித்துவிட்டனர். அங்கிருந்த மற்ற பயணிகளிடம் விசாரித்து, சஞ்சயின் அடையாளத்தை போலீசார் உறுதி செய்தனர். அதற்குள் மாலை 5.30 மணியாகிவிட்டது.
அப்போது, பயணி ஒருவர் தந்த தகவலின் மூலம், சஞ்சய் சென்னையிலிருந்து டெல்லிக்கு திரும்பி வருவது தெரிந்தது. இரவு 9 மணிக்கு டெல்லி வந்து சேரும் ஐசி 539 விமானத்துக்காக சஞ்சய், சென்னை விமான நிலையத்தில் காத்திருந்ததாகவும் அந்த பயணி போலீசில் தெரிவித்தார்.
இதையடுத்து, டெடில்லி விமான நிலையத்தில் காலடி வைத்த உடனடியாக சஞ்சயை போலீசார் மடக்கினர். இதற்கிடையே போலீஸ் தன்னை தேடுவதை எப்படியோ உணர்ந்துகொண்ட சஞ்சய், தான் திருடிய போனை விமானத்திற்கு உள்ளேயே டாய்லெட்டில் வீசியெறிந்து விட்டார்.
முதலில் போலீசிடம் சிக்கியபோது ஒன்றும் தெரியாதவர் போல சஞ்சய் நடித்துள்ளார். பின்னர் கேமரா பதிவு ஆதாரங்களை காட்டியதும், வேறு வழியில்லாமல் திருட்டை ஒப்புக்கொண்டு, போன் இருக்குமிடத்தையும் போலீசிடம் கூறிவிட்டார் சஞ்சய்.
பூரி அளித்த புகாரின் பேரில், விமான நிலைய போலீசார் சஞ்சயை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications