கள்ளக்காதலனுக்கு நிச்சயித்த பெண்ணைக் கடத்தி எச்ஐவி கிருமியை செலுத்த முயன்ற அதிமுக கவுன்சிலர்
திருச்சி: 32 வயதான அதிமுக பெண் கவுன்சிலர், தனது கள்ளக் காதலுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணைக் கடத்திச் சென்று அவருக்கு எச்ஐவி கிருமியை ஊசி மூலம் செலுத்த முயன்ற அக்கிரமம் நடந்துள்ளது. இதையடுத்து அந்தக் கவுன்சிலரை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
திருச்சி, திருவெறும்பூர் ஒன்றிய அதிமுக கவுன்சிலராக இருப்பவர் ராஜகுமாரி (32). இவரது கணவர் பெயர் நடேசன். ராஜகுமாரிக்கும், குமரமதீஸ்வரன் என்பவருக்கும் இடையே கள்ளக் காதல் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் குமரமதீஸ்வரனுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயமானது.
மேலகுமரேஸ்வரம் பகுதியை சேர்ந்த சத்யா என்பவருக்கும், அவருக்கும் இடையே திருமணம் நிச்சயமானது. தனது கள்ளக் காதலனுக்கு திருமணம் நடைபெற இருப்பதால் திடுக்கிட்டுப் போன ராஜகுமாரி அதனை தடுத்து நிறுத்த சதித் திட்டம் தீட்டினார்.
எச்ஐவி நோய்க்கிருமியை மணப்பெண் உடலில் செலுத்த திட்டமிட்டார். இதற்காக தனியார் மருத்துவமனையில் வேலை பார்க்கும் சரஸ்வதி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த கண்மணி ஆகியோரின் உதவியை நாடினார்.
கண்மணி மணப்பெண் சத்யாவின் தோழி என்பதால் அவர் மூலம் கடத்த திட்டமிடப்பட்டது. பின்னர் திருவெறும்பூர் பகுதியில் உள்ள எய்ட்ஸ் நோயாளி ஒருவரின் ரத்தத்தை எடுத்து சத்யாவுக்கு செலுத்தவும் திட்டமிடப்பட்டது.
கடந்த ஜூன் 24ந் தேதி திட்டமிட்டபடி கண்மணி தனது தோழி சத்யாவின் வீட்டுக்கு சென்று அவரை திருச்சி தாலுகா அலுவலகத்துக்கு செல்ல இருப்பதாக கூறி அழைத்து வந்திருக்கிறார்.
இதனிடையே ராஜகுமாரி எய்ட்ஸ் நோயாளி உடலில் இருந்து ஊசி மூலம் ரத்தத்தை எடுத்துக்கொண்டு கள்ளணை பகுதியில் காத்திருந்தார். கள்ளணைக்கு சத்யா, கண்மணி வந்ததும் அவர்கள் வந்த காரில் ஏறிக்கொண்டார்.அப்போது சத்யாவின் முகத்தில் மயக்க மருந்தை தெளித்திருக்கின்றனர். பின்னர் ஊசி மூலமாக ரத்தத்தை செலுத்த முயன்றனர்.
அரைகுறை மயக்கத்தில் இருந்து விழித்துக் கொண்ட சத்யா, ஊசி போடப்படுவதைப் பார்த்து திடுக்கிட்டுப் போய் போராடினார். இதனால் ஊசி உடைந்து ரத்தம் கொட்டி விட்டது. சத்யாவுக்கும் மயக்கம் முழுமையாகத் தெளிந்து விட்டது. அதிர்ச்சி அடைந்த ராஜகுமாரி இந்த தகவல் வெளியே தெரியக்கூடாது என சத்யாவை மிரட்டி அனுப்பி விட்டார்.
இதனால் கடந்த 6 மாதங்களாக சத்யா மிகவும் சோகமாகவும், குழப்பமான மனநிலையோடும் இருந்திருக்கிறார். இதுபற்றி உறவினர்கள் விசாரித்ததைத் தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த உண்மைகளை கூறியிருக்கிறார்.
இதனையடுத்து அவருடைய தாய், திருவெறும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் புகார் உண்மைதான் என தெரிய வந்தது.
இதனையடுத்து ராஜகுமாரி மற்றும் சரஸ்வதி கைது செய்யப்பட்டனர். கண்மணியை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து ராஜகுமாரியை அதிமுகவிலிருந்து ஜெயலலிதா நீக்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,அதிமுகவின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல் பட்டதாலும், அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும்,
அதிமுகவின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், திருச்சி புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ராஜகுமாரி இன்று முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.கட்சித் தொண்டர்கள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.