கேரளாவை எப்படியாவது தடுத்து நிறுத்துங்கள்-ஜெ
சென்னை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட கேரள அரசு மேற்கொண்டுள்ள ஆய்வுப் பணியை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கை நழுவிப்போகும் நிலையில் இருக்கின்ற முல்லைப் பெரியாறு அணையை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினால், மத்திய அரசிற்கும், கேரள அரசிற்கும் நெருக்கடியை கொடுக்காமல், என் மீது வசைமாரி பொழிவதிலேயே கருணாநிதி கவனம் செலுத்துவதன் விளைவாக, கேரள அரசு முல்லைப் பெரியாறு பகுதியில் தமிழகத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறது.
இரண்டு தினங்களுக்கு முன்பு, முல்லைப் பெரியாறு பகுதியில் புகைப்படம் எடுப்பதற்காக தமிழக அரசின் பொதுப்பணித் துறை செயற் பொறியாளர் சென்றபோது, கேரள வனத் துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும், பின்னர் புகைப்படம் எடுக்காமலேயே அவர் திரும்பிவிட்டதாகவும் செய்திகள் வெளியாயின.
இது மட்டுமல்லாமல், அணையின் பராமரிப்பு பணியை மேற்கொள்ளும் பொருட்டு கட்டுமானப் பொருட்களை எடுத்துச்சென்ற தமிழக பொதுப்பணித் துறையினரையும் கேரள அரசு தடுத்து நிறுத்தி விட்டதாகவும் செய்திகள் வெளி வந்துள்ளன.
அதே சமயத்தில் நேற்று, கேரள அரசின் நீர்ப்பாசனத் துறை அதிகாரிகள் இரண்டு புகைப்படக்காரர்களுடன் சென்று, அங்குள்ள பகுதிகளை பல்வேறு கோணங்களில் புகைப்படம் எடுத்ததாகவும், இதற்கு கேரள வனத்துறையினர் எந்தத் தடையையும் விதிக்கவில்லை என்றும் செய்திகள் வெளிவந்துள்ளன.
கடந்த ஒரு வாரத்தில் நடந்துள்ள நிகழ்வுகளைப் பார்த்தால் நமக்கு இருக்கின்ற உரிமையும் பறி போய்விடும் நிலைமை தான் இருக்கிறது.
முல்லைப் பெரியாறு அணையை புகைப்படம் எடுப்பதற்கும், பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும் கூட தமிழக அரசின் பொதுப் பணித்துறையினர் அனுமதிக்கப்படாத சூழ்நிலையில், “தமிழகத்திற்கு தண்ணீர் அளிக்கப்படும்“ என்ற கேரள முதல்வரின் கூற்றை, கேரள அரசின் வாதத்தை நிச்சயமாக நம்ப முடியாது.
முல்லைப் பெரியாறு அணையில் தமிழக அரசின் கட்டுப்பாடு முழுவதும் போய்விடுமோ என்ற அச்சம் தமிழக மக்களின் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.
இந்த இக்கட்டான சூழ் நிலையில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டும் பொருட்டு, தமிழகத்திற்கு எதிரான கேரள அரசின் நடவடிக்கைகளையும், கேரள அரசின் துரோக மனப்பான்மையையும் உச்சநீதிமன்றத்தில் தெரிவிப்பதோடு, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை நிறுத்தவும்,
தமிழக அதிகாரிகள் முல்லைப் பெரியாறு பகுதியில் எவ்வித தடங்கலும் இன்றி சென்று வரவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதுள்ள அணையின் நீர்மட்டத்தை உயர்த்துவது என்பது வேறு, புதிய அணை கட்டுவது என்பது வேறு. புதிய அணை என்று வந்துவிட்டாலே அனைத்தும் கேரள அரசின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிடும். பிறகு, அணையின் நீர்மட்டத்தை எப்படி உயர்த்துவது?, எங்கிருந்து உயர்த்துவது?.
எனவே, தற்போதைய முக்கியப் பணியே புதிய அணைக்கான ஆய்வுப் பணியை தடுத்து நிறுத்துவது தான். தற்போதைய முக்கிய தேவையே புதிய அணைக்கான ஆய்வுப் பணியை எப்படியாவது தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்பது தான் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
குடுத்துருங்கப்பா..
ஜெயலலிதா விடுத்துள்ள இன்னொரு அறிக்கையில், அதிமுகவில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் தங்களுடைய பதிவை மீண்டும் புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய உறுப்பினர்களும் சேர்ந்து இருக்கிறார்கள்.
இவர்களுக்கான உறுப்பினர் உரிமை சீட்டுகளை தலைமைக் கழகத்தில் இருந்து அதிமுக நிர்வாகிகள் சிலரும், தொண்டர்கள் சிலரும் பெற்றுச் சென்றுள்ளனர். ஆனால், சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்காமல் அதனை தங்களிடமே வைத்துக் கொண்டுள்ளதாக எனக்கு புகார்கள் வந்துள்ளன.
எனவே, தலைமைக் கழகத்தில் இருந்து உறுப்பினர் உரிமைச் சீட்டுக்களை பெற்றுச் சென்றுள்ளவர்கள், அவைகளை உரியவர்களிடம் உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications