அரசு கேபிள் டிவி வாரியம்- விரைவில் உறுப்பினர் சேர்க்கை தொடக்கம்
சென்னை: தமிழக அரசின் கேபிள் டிவி நல வாரியத்திற்கு விரைவில் உறுப்பினர் சேர்க்கை தொடங்கவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசின் செய்திக்குறிப்பில்,
கேபிள் டிவி தொழிலாளர்களின் நலனுக்காக தமிழக அரசு நல வாரியம் ஒன்றை அமைத்துள்ளது. இவ்வாரியத்தின் முக்கிய கூட்டம், தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் பூங்கோதை தலைமையில், அலுவல் சார்ந்த மற்றும் அலுவல் சாரா உறுப்பினர்களை கொண்டு தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், கம்பிவட தொலைக்காட்சி தொழிலாளர்கள் நல வாரியத்தின் மூலம் கம்பி வட தொலைக்காட்சி தொழிலாளர்களுக்கு அரசு செயல்படுத்த இருக்கும் நலத்திட்ட உதவிகள் மற்றும் அதற்கான வழிகாட்டி நெறிமுறைகள் விவாதிக்கப்பட்டன.
இந் நெறிமுறைகளை பின்பற்றி உறுப்பினர் சேர்க்கைக்கான படிவமும், பிற படிவங்களும் அச்சிடப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளன. உறுப்பினராக சேர்க்கப்படும் நபர்களுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்படும்.
இதன் பின்னர் உறுப்பினர்கள் கோரும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்குண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இத்திட்டத்தின் மூலம் சுமார் 30 ஆயிரம் நபர்கள் பயன்பெறுவார்கள். இந்த நலத்திட்டங்களுக்காக முதல்வர் கருணாநிதி ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இத்தொழிலாளர்கள் அனைவரும் கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் உதவி பெற தகுதியுள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.