கள்ளதுப்பாக்கி விவகாரம்: போலீசுக்கு பயந்து ஆதிவாசிகள் காட்டுக்குள் ஓட்டம்
புளியங்குடி: வாசுதேவநல்லூர் தலையணை பகுதியில் கள்ளத் துப்பாக்கி விவகாரத்தில் போலீசாரின் கெடிபிடியால் ஆதிவாசிகள் காட்டு பகுதிக்குள் தஞ்சமடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் கள்ளத் துப்பாக்கி வைத்திருந்ததாக விகேபுரம், புன்னையாபுரம், புளியங்குடி, வாசுதேவநல்லூர், திருமலாபுரம் ஆகிய பகுதிகளில் 3 பழங்குடியின இளைஞர்கள் உள்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 7 கள்ள துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்களில் புளியங்குடி வனசரகத்திற்கு உட்பட்ட கோட்டை மலையாறு சேழிம்புதோப்பு பகுதியை சேர்ந்த செல்லையா மகன்கள் தினகரன், காபிரியேல், மற்றும் வாசுதேவநல்லூர் தலையணை பகுதியை சேர்ந்த ரவிதாமஸ் ஆகியோர் பழங்குடியித்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில் குற்றாலம், கடையநல்லூர், புளியங்குடி. சிவகிரி வனசரக்கதிற்கு உட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வனவிலங்குளை கள்ள துப்பாக்கி மூலம் சிலர் வேட்டையாடி வருவதாக போலீசார் மற்றும் வனத்துறைக்கு தகவல் கிடைத்தது.
இவர்களை போலீஸ் தேடி வரும் நிலையில் வாசுதேவநல்லூர் தலையணை பழங்குடியின மக்கள் வசிப்பிடத்திலும் போலீசர் கெடுபிடி செய்வதால் 30க்கும் மேற்பட்ட ஆதிவாசி ஆண்கள், பெண்கள், முதியவர்கள் காட்டுக்குள் தலைமறைவாகியுள்ளனர்.
இதனால் கடந்த 3 தினங்களாக காட்டுக்குள் இருக்கும் ஆண்கள் மட்டுமின்றி பெண்கள், குழந்தைகள் உணவின்றி பட்டினி கிடக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடியின மக்கள் சங்கத்தின் தென்மாவட்ட தலைவர் பாண்டியன் கூறுகையி்ல், போலீசார் தேடுதல் வேட்டை என்ற பெயரில் பீதியை கிளப்பியதால் தலையணை ஆதிவாசி இனத்தை சேர்நதவர்கள் காட்டில் தஞ்சமடைந்துள்ளனர். உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க பழங்குடியின மக்கள் போலீசாருக்கு ஓத்துழைப்பு அளிப்பார்கள்.
எனவே எவ்விதத்திலும் போலீசார் துன்புறுத்தாமல் மீண்டும் தங்கள் வசிப்பிடத்தில் அச்சமின்றி வாழ்ந்திட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications