தலித் இளைஞரை மணந்ததால் மகளை அடித்துக் கொன்ற தந்தை
சென்னை: தலித் இளைஞரை திருமணம் செய்த பெண் தந்தை மற்றும் உறவினரால் கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சியைச் சேர்ந்தவர் ஸ்ரீபிரியா (21). பி.எட் படித்து வந்தார். கள்ளர் சமூகத்தை சேர்ந்த இவர், தன்னுடன் படித்த பத்ரகாளி என்ற தலித் இளைஞரை காதலித்தார். கடந்த 29ம் தேதி இருவரும் வீட்டிற்கு தெரியாமல், சேலத்துக்கு சென்று திருமணம் செய்துகொண்டனர்.
உடுமலைப்பேட்டை அருகில் உள்ள மடத்துக்குளத்தில், பத்ரகாளியின் சகோதரி வீட்டில் இருவரும் தங்கினர். கலப்பு திருமணத்தால், ஸ்ரீபிரியாவின் பெற்றோர் மிகுந்த ஆத்திரம் அடைந்தனர். இதனால், தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று பழனி அனைத்து மகளிர்
காவல் நிலையத்தில் ஸ்ரீபிரியா சார்பில் புகார் தரப்பட்டது.
இதையடுத்து, ஸ்ரீபிரியாவின் தந்தையும், உறவினர்களும் கடந்த மாதம் 5ம் தேதி பழனிக்கு வந்து போலீசார் முன்னிலையில், 'ஸ்ரீபிரியாவுடன் இனி எந்த ஒட்டுறவும் இல்லை' என எழுதி கொடுத்துவிட்டு கோய்விட்டனர். இந்நிலையில், கடந்த புதன்கிழமை, ஸ்ரீபிரியாவைத் தேடி
அவரின் தந்தை சீனிவாசன், மருமகன் ஆசைத்தம்பி மற்றும் உறவினர் பன்னாடி ஆகியோர் மடத்துக்குளம் வந்தனர்.
பத்ரகாளி வீட்டில் இல்லாத நிலையில், ஸ்ரீபிரியாவை தன்னுடன் வருமாறு தந்தை சீனிவாசன் வற்புறுத்தியுள்ளார். ஸ்ரீபிரியா பிடிவாதமாக மறுத்ததால், மூன்று பேரும் கோபமாக வெளியே சென்றனர்.
சற்று நேரத்திற்கு பிறகு, ஆசைத்தம்பியும் பன்னாடியும் மீண்டும் ஸ்ரீபிரியா இருக்கும் வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, அங்கிருந்த பத்ரகாளியின் சகோதரி அவர்களை தடுத்துள்ளார். ஆனால், அவரை கத்தியை காட்டி மிரட்டிவிட்டு இருவரும் உள்ளே சென்று ஸ்ரீபிரியாவை
தாறுமாறாக பிடித்து இழுத்தும், காட்டுமிராண்டித்தனமாக அடித்து உதைத்தும் கொடுமைபடுத்தியுள்ளனர்.
இதில், ஸ்ரீபிரியாவின் கழுத்து, மார்பு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டு, சற்று நேரத்தில் ஸ்ரீபிரியா பரிதாபமாக உயிரிழந்தார்.
உடுமலைபேட்டை போலீசார் ஸ்ரீபிரியாவின் தந்தை சீனிவாசன் (65), மருமகன் ஆசைத்தம்பி என்கிற ராஜ்கண்ணன் (27) மற்றும் பன்னாடி (30) ஆகிய மூவரையும் கைது செய்தனர்.
ஸ்ரீபிரியாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பத்ரகாளி உறவினரிடம் வழங்கப்பட்டது. சம்பவம் குறித்து பத்ரகாளியின் சகோதரி கணவர் சந்திரசேகர் கூறுகையில், ஸ்ரீபிரியா சாவதற்கு சில நிமிடங்களுக்கு முன் என்னுடன் பேசினார். அப்போதும் அவள் தந்தை மீது நம்பிக்கை வைத்து தான் பேசினாள். அப்பா மனசு மாறிடும் என்று தான் கூறினாள். இப்படி செய்வாங்கன்னு கொஞ்சம் பொறி தட்டியிருந்தா புள்ளைய காப்பாத்தியிருப்போம் என்றார்.
'ஜாதியின் கவுரவத்தையும், குடு்ம்ப மானத்தையும் காப்பாற்றுகிறோம் என்ற பேரில், அடித்து கொலை செய்வதை கருணைக் கொலை என்று நியாயப்படுத்த முடியாது. ஒரு பெண்ணை மார்பில் குத்தி காயப்படுத்துவது தான் ஜாதியை காப்பாற்றும் அழகா? தமிழ்நாட்டில் இதுபோன்ற சம்பவம் கடந்த 2 ஆண்டில் மட்டும் 7 முறை நடந்துள்ளது என்று இந்த சம்பவம் குறித்து எவிடன்ஸ் என்ற தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த கதிர் கூறினார்.












Click it and Unblock the Notifications