மழை- அதிகாரிகளுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை
சென்னை: மழை, வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்பாக முதல்வர் கருணாநிதி 2வது நாளாக இன்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகம் முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் வெள்ளப் பெருக்கைத் தடுப்பது, வெள்ள நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக அதிகாரிகளுடன் நேற்று முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
ஆறு, குளம், ஏரிகள் உடைவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறும், வெள்ளத்தடுப்பு பணியில் விழிப்புடன் இருக்குமாறும் அரசு அதிகாரிகளுக்கு துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே உத்தரவிட்டு இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி, அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார்.
இதில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் , தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, நிதித்துறை முதன்மைச் செயலாளர் கு.ஞானதேசிகன், சென்னை மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது வெள்ளத் தடுப்பு நடவடிக்கை களை முடுக்கி விடுமாறும், ஆறுகள், ஏரிகள், குளங்கள் உடைந்து விடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டார்.
மீண்டும் ஆலோசனை ...
இந்த நிலையில் இன்று மீண்டும் முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
இதில் தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, மாநகர மேயர் மா.சுப்ரமணியம், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கோனி, மாவட்ட கலெக்டர், போலீஸ் கமிஷனர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சென்னை நகர சாலைகள், தெருக்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற துரிதமாக நடவடிக்கை எடுக்குமாறு அப்போது முதல்வர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications