நீதிமன்றத்துக்குள் வழக்கறிஞர்கள் போராட்டம்-நீதிபதி தினகரன் வெளிநடப்பு
வழக்கறிஞர்களின் கலாட்டாவை ஒளிப்பதிவு செய்த சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியின் கேமராமேன் உள்ளிட்ட சில நிருபர்களை அவர்கள் தாக்கினர்.
தமிழகத்தில் நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக புகார் எழுந்துள்ளதால் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள தினகரனுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி தருவதில் சிக்கல் எழுந்துள்ளது.
இந்த விவகாரத்தில் நாடு முழுவதும் வழக்கறிஞர்களில் ஒரு பிரிவினரும் சில கட்சிகளும் அவருக்கு எதிராக வரிந்து கட்டி போராடி வருகின்றன.
இந் நிலையில் அவர் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும் இருக்கக் கூடாது என கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒரு பிரிவு வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.
இதற்கிடையே இன்று தனது கோர்ட் ஹாலில் தலைமை நீதிபதி தினகரன் வழக்கை விசாரித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த வழக்கறிஞர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தினகரன் உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரினர். இதையடுத்து அந்த நீதிமன்ற அறையில் இருந்து தினகரன் வெளியேறினர்.
வழக்கறிஞர்களின் இந்தப் போராட்டத்தைப் பதிவு செய்ய முயன்ற நிருபர்களை வழக்கறிஞர்கள் தாக்கினர்.