ஆழியார் அணையிலிருந்து நீர் திறப்பு- கேரள அணையில் விரிசல்
கன மழை காரணமாக ஆழியார் அணை நிரம்பியதைத் தொடர்ந்து அதிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறக்கப்படவுள்ளதாக கேரளாவுக்கு முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடப்பட்டது. இதையடுத்து அணை திறக்கப்பட்டது.
முதலில் 14 டிஎம்சி நீரை திறந்துவிடப் போவதாக அறிவித்த தமிழக பொதுப் பணித்துறையினர் திடீரென 34 டிஎம்சி நீரைத் திறந்துவிட்டதாகத் தெரிகிறது.
ஒரே நேரத்தில் பெருமளவில் தண்ணீர் வந்ததால் கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள மூலதாரா அணையின் வலது பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அணையிலிருந்து திமுதிமுவென தண்ணீர் பொங்கிப் பெருகி வந்ததால், சித்தூர்புழா, பரதப்புழா ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதில் அணைக்கு அருகில் உள்ள சில வீடுகள், சில சிறு பாலங்கள், பயிர்கள் நீரில் மூழ்கின. அணைக்கு அருகில் சிக்கித் தவித்த 32 பேரை போலீஸாரும், தீயணைப்புப் படையினரும் மீட்டனர். சித்தூர் தாலுகாவில் உள்ள பல தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
அணையில் பகலிலேயே உடைப்பு ஏற்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டதாக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூலதாரா அணையின் வலது பக்கக் கரையில் உடைப்பு ஏற்படுவது இது மூன்றாவது முறையாகும்.
இரு மாநிலங்களுக்கும் இடையிலான பரம்பிக்குளம் ஆழியார் திட்டத்தின் கீழ் இந்த மூலதாரா அணைக்கட்டு வருகிறது. இதற்கு முன்பு 1960 மற்றும் 92 ஆகிய ஆண்டுகளில் இந்த அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று காலை ஆழியார் அணை திறக்கப்பட்டது. ஆனால், சனிக்கிழமை பிற்பகலே இதுகுறித்து கேரள அதிகாரிகளுக்கு தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.