நெல்லை ஆறுகளில் வெள்ளம்-வீடுகள் சேதம்
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கி 50 வீடுகள் சேதமடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக பலத்த மழை பரவலாக பெய்து வருகிறது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நீர் மட்டமும் கணிசமாக உயர்ந்துள்ளது.
பாபநாசம் அணை செஞ்சுரி ..
பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் 92.50 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 8 அடியாக உயர்ந்து 100.30 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 6189 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சேர்வலாறு அணையில் நேற்று முன்தினம் 117.62 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 7 அடி உயர்ந்து 124.34 அடியாக உள்ளது.
மணி்முத்தாறு அணையில் நேற்று முன்தினம் 83.70 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 6 அடி உயர்ந்து 89 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4610 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 10 கன அடி .தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
கடனாநதியில் 83 அடி, ராமநதியில் 82, கருப்பாநதியில் 70.21, குண்டாறில் 36.10, அடவிநயினாரில் 96.50, வடக்கு பச்சையாறில் 29, நம்பியாறில் 10.95, கொடுமுடியாறில் 42 நீர்மட்டம் உள்ளது.
அணைப் பகுதிகளில் பெய்த மழை அளவு...
காரையார் 60 மிமீ
பாபநாசம் கீழணை 49 மிமீ
சேர்வலாறு 10 மிமீ
மணிமுத்தாறு 56 மிமீ
அம்பை 11 மிமீ
கடப்பா நதி 82 மிமீ
அடவிநயிணார் 75 மிமீ
சிவகிரியில் விடிய விடிய...
நேற்று முன்தினம் இரவில் சிவகிரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து விடிய விடிய பலத்த மழை பெய்தது. நேற்று காலை வரை 237.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.
ஒரே நாளில் தமிழகத்தில் வேறு எங்கும் இந்த அளவு மழை பெய்ததில்லை. மாவட்டத்தில் மற்ற பகுதிகளை பொறுத்தவரை சங்கரன்கோவில் 98, செங்கோட்டை 51, ஆய்குடி 27, தென்காசி 23, நான்குநேரி 20, பாளை 18.2, ஆலங்குளத்தில் 16, நெல்லையில் 14, ராதாபுரத்தில் 14, அம்பையில் 11 மிமீ் அளவு மழை பதிவாகியுள்ளது.
பலத்த மழை காரணமாக தமிழகத்தில் ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.
முருகன் கோவிலில் வெள்ளம்...
நெல்லை குறுக்கு துறை முருகன் கோயிலில் வெள்ளம் புகுந்துள்ளது.
மாவட்டத்தில் பலத்த மழையின் காரணமாக பகுதியாகவும், முழுமையாகவும் சுமார் 50 வீடுகள் சேதமடைந்துள்ளது.
தென்காசி மலையான் தெரு, ஆயிரப்பேரி, சங்கரன்கோவில் வீரசிகாமணி, மருதன்கிணறு, பெரியகோவிலான்குளம், உட்பட பல பகுதிகளில் வீடுகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக தாலுகா வரியாக வருவாய்துறை அதிகாரிகள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கன்னியாகுமரி படகு போக்குவரத்து ரத்து:
கன்னியாகுமரியில் பலத்த காற்றுடன் நேற்றிரவு முதல் இன்று விடிய விடிய மழை பெய்தது. இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.