தமிழக மீனவர்களை சுட்டு மீன்களைக் கொள்ளையடித்துச் சென்ற இலங்கை கடற்படை
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டனம் பகுதியைச் சேர்ந்த மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு, அவர்கள் வைத்திருந்த மீன்களைக் கொள்ளையடித்த இலங்கைக் கடற்படையினர், மீனவர்களின் விசைப் படகுகளையும் சேதமாக்கி அட்டகாசம் செய்துள்ளனர். மீன்பிடி வலைகள், பிற சாதனங்களையும் பறித்து கடலில் தூக்கி வீசியுள்ளனர்.
கோட்டைப்பட்டனத்திலிருந்து நேற்று காலை 239 விசைப் படகுகளில் மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
அவர்களில் கருப்பையா, சேகர், மனோகர், முருகேசன், நாராயணன், குணசேகரன், குமார், தங்கத்துரை, நூர்தின் ஆகியோர் 3 படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும் படகுகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்தி அவற்றை சேதப்படுத்தினர். இதில் ராஜா முகம்மது என்பவருக்குச் சொந்தமான படகு பெரும் சேதமடைந்தது.
பின்னர் படகுகளை நெருங்கிய இலங்கைப் படையினர் மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களை எடுத்துக் கொண்டனர். மேலும் மீனவர்கள் வைத்திருந்த சாதனங்களயும், மீன்பிடி வலைகளையும் பறித்து கடலில் தூக்கி வீசினர்.
பின்னர் அனைவரையும் திரும்பிப் போகுமாறு துப்பாக்கிகளைக் காட்டி மிரட்டினர். இதையடுத்து மீனவர்கள் அவசரமாக கரைக்குத் திரும்பினர்.