சிறுதாவூர் ஜெ. நிலம்: மெத்தனம் காட்டுவது யார்?-சிபிஎம்
சென்னை: சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் மெத்தனம் காட்டுவது யார்? என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
அக் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
காவேரிராஜபுரம் நிலமீட்பு போராட்டம் தொடர்பாக முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், சிறுதாவூர் நிலம் பற்றி தற்போது மார்க்சிஸ்ட் கட்சியினர் அவசரம் காட்டவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ளது, எந்த விதத்திலும் பொருத்தமானது அல்ல.
தற்போது'' என்று முதல்வர் கூறியுள்ளது அதிமுகவுடன் மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி உடன்பாடு கொண்ட பின்னணியைக் குறிப்பதாக உள்ளது.
அவ்வாறு உடன்பாடு கொண்டு தேர்தல் களத்தில் நின்றிருந்த போதே திமுக தரப்பில் சிறுதாவூர் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, சிறுதாவூர் நிலப் பிரச்சினையில் மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு எவ்வித மாற்றமும் இன்றித் தொடர்கிறது'' என்று தெளிவுபடுத்தப்பட்டது.
அதே காலகட்டத்தில் இப்பிரச்சனை தொடர்பான விசாரணை ஆணையத்தின் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நேரடி சாட்சியம் அளிக்கப்பட்டது மட்டுமின்றி, கட்சியின் சார்பில் வழக்கறிஞர் மூலமான வாதங்களும் முன்வைக்கப்பட்டுவிட்டன.
இப்பிரச்சனையில் இறுதி அறிக்கை தரவேண்டிய விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி சிவசுப்பிரமணியன், வேறொரு விசாரணையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதால் சிறுதாவூர் பிரச்சனை கிடப்பில் போடப்பட்டுள்ளதே தவிர, மார்க்சிஸ்ட் கட்சி அவசரம் காட்டாததால் அல்ல.
மேற்கு வங்கத்துக்கு ஒரு சட்டம், தமிழ்நாட்டுக்கு ஒரு சட்டம் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் செயல்படக்கூடாது என்றும் முதல்வர் கூறியுள்ளார். நிலச்சீர்திருத்தச் சட்டம் மேற்குவங்கத்தில் எவ்வளவு சிறப்பாக அமல்படுத்தப்பட்டுள்ளது என்பதை, மண்டல் கமிஷன் அறிக்கையே பதிவு செய்துள்ளதையும்,
தமிழ்நாட்டில் நிலச் சீர்திருத்தச் சட்டம், மறைந்த அண்ணாவாலேயே உச்ச வரம்பா, மிச்ச வரம்பா' என்று ஏகடியம் பேசப்பட்ட நிலை மாறவில்லை என்பதையும் மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விழைகிறது.
தமிழக அரசு மெத்தனம் காட்டக்கூடாது என்பதற்காக அமைதியான முறையில் நிலமீட்சிப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கட்சியின் நிலைப்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. ஆக்கிரமிப்பு நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க மார்க்சிஸ்ட் கட்சி ஒத்துழைப்பை நல்கும்.
நிலமீட்சிப் போராட்டத்தை சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாக சித்தரிக்க முதல்வர் முற்பட வேண்டாம் எனவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications