திருமூர்த்திமலை-வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 லிங்கங்கள்
உடுமலை: உடுமலை அருகே பெய்த கன மழையால் திருமூர்த்திமலை கோவிலுக்கு அருகே உள்ள அருவியின் அருகே வைக்கப்பட்டிருந்த 3 லிங்கங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே உள்ள திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் விநாயகர் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில்கள் உள்ளன.
திருமூர்த்திமலை பகுதியில் 2 நாட்களாக பெய்து வரும் கன மழையால் பாலாற்றின் பஞ்சலிங்கம் அருவியில் வெள்ளம் கொட்டுகிறது.
இதில் திருமூர்த்திமலை அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில், விநாயகர் கோவில் ஆகிய கோவில்களை வெள்ளம் சூழ்ந்தது.
1975ம் ஆண்டு பஞ்சலிங்கம் அருவிக்கு மேல் 50 மீட்டர் தூரத்தில், திறந்த வெளியில் பீடம் அமைத்து அதில் 5 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்டிருந்தன.
அந்த 5 லிங்கங்களில், 3 லிங்கங்களை வெள்ளம் அடித்து சென்று விட்டது. அத்துடன் அங்கு இருந்த நாக கன்னி சிலையும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டது.
நாகதோஷம் உள்ளவர்கள், திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ள குன்றின் கிழக்கு புறத்தில் நாகதோஷ பரிகார கற்களை வைத்து செல்வது உண்டு. அப்படி அங்கு வைக்கப்பட்டிருந்த பரிகார கற்களும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுவிட்டன.
இப்போது வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து பாலாற்றில் அடித்துச் செல்லப்பட்ட 3 லிங்கங்களையும் தேடும் பணியில் கோவில் நிர்வாகத்தினரும் பக்தர்களும் ஈடுபட்டு்ள்ளனர்.
நேற்று முன்தினம் காட்டாற்று வெள்ளம் கோவிலை சூழ்ந்ததால் கோவிலுக்குள் பக்தர்கள் யாரும் செல்ல முடியவில்லை. பூஜைகளும் நடக்கவில்லை.
நேற்று கோவிலை சூழ்ந்திருந்த வெள்ளம் வடிந்ததைத் தொடர்ந்து, காலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில், விநாயகர் கோவில், சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆகிய மூன்று கோவில்களும் சுத்தம் செய்யப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடந்தன.
கடந்த 1987ம் ஆண்டில் இதே போன்று வெள்ளத்தில் 5 லிங்கங்களில் 4 லிங்கங்கள் அடித்து செல்லப்பட்டன. அதன் பிறகு 2002ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தின் போது, புதியதாக இந்த 5 லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications