இந்திய கடற்படை அதிகாரியை கொன்ற பிரிட்டிஷ் நபருக்கு 18 ஆண்டு சிறை
லண்டன்: கிளாஸ்கோ நகரில் கடந்த மார்ச் மாதம் இந்திய கடற்படை அதிகாரியை இனவெறியுடன் தாக்கிக் கொலை செய்த இங்கிலாந்து நபருக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்தவர் குணால் மொஹந்தி. 30 வயதான இவர் கடற்படை அதிகாரி ஆவார். கடந்த மார்ச் மாதம் இவர் கிளாஸ்கோ நகரில் உள்ள ஒரு விடுதிக்கு தனது நண்பர்களோடு போய்க் கொண்டிருந்தார்.
அப்போது கிறிஸ்டோபர் மில்லர் என்ற 25 வயது இளைஞர் மொஹந்தியை ஆவேசமாக கூச்சலிட்டபடி கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த மொஹந்தி உயிரிழந்தார்.
இதையடுத்து மில்லர் கைது செய்யப்பட்டு கிளாஸ்கோ ஹைகோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற தற்காலிக நீதிபதி ஜான் பெக்கெட், இந்தக் கொலை இனவெறியுடன் செய்தது நிரூபணமாகியுள்ளது.
இந்தக் கொலைக்காக மில்லர் வருந்தியதாகத் தெரியவில்லை. மாறாக சந்தோஷமடைந்துள்ளார் என்பது தெரிய வருகிறது.
கழுத்தை அறுத்து மிகக் கொடூரமாக இந்தக் கொலை நடந்துள்ளது. இதற்கு நியாயம் கற்பிக்க முடியாது. ஒரு மனிதனின் நிறத்தை வைத்து இவ்வாறு செய்ய முயல்வது பாவச் செயலாகும். இதற்கு மன்னிப்பும் கிடையாது என்று கூறி 18 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்திய கடற்படையில் பணியாற்றி வந்தவர் மொஹந்தி. கேப்டன் பதவிக்கான தேர்வுக்காக கிளாஸ்கோ சென்றிருந்தபோது பரிதாபமாக கொலை செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications