கடலோர காவல்படைக்கு தூத்துக்குடியில் விமான தளம்
சென்னை: கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல ஐ.ஜி ஏ.ராஜசேகர் இன்று முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது பொதுத்துறைச் செயலாளர் தேவ ஜோதி ஜெகராஜன் உடனிருந்தார்.
அப்போது தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்தி வருவது குறித்து முதல்வர் வருத்தம் தெரிவித்ததாக பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜசேகர் தெரிவித்தார்.
அவர் கூறுகையில், தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது குறித்து முதல்வர் கருணாநிதி வருத்தம் தெரிவித்தார். இந்த தாக்குதல் தொடராமல் இருக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாட்டில் கடலோர காவல்படைக்கு விமானத் தளம் அமைக்க தூத்துக்குடியில் 50 ஏக்கர் இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. இங்கு விரைவில் கடற்படை தளம் அமைக்கப்படும்.
அதே போல சென்னையில் கடலோரக் காவல் படைக்கு என தனி கப்பல் தளமும், உளுந்தூர்பேட்டையிலும் விமானத் தளமும் அமைக்கப்படும் என்றார்.
கடலோரக் காவல் படை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மூலமும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.