மன்னிப்பு கோரி தப்பிக்க ராஜ் திட்டம்!
மும்பை: மகாராஷ்டிர சட்டசபையில் இந்தியில் பதவியேற்ற எம்எல்ஏவை அடித்து இப்போது உச்ச நீதிமன்றத்தில் வழக்கை சந்திக்கும் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா கட்சி, நடந்த சம்பவத்துக்காக சட்டசபையிடம் மன்னிப்பு கேட்பதாக அறிவித்துள்ளது.
இதன்மூலம் 4 ஆண்டுகள் சஸ்பெண்ட் ஆன 4 எம்எல்ஏக்களை பாதுகாப்பதோடு, உச்ச நீதிமன்ற வழக்கில் இருந்து தப்பவும் அந்தக் கட்சி திட்டமிடுவதாகத் தெரிகிறது.
அந்தக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான அதுல் சர்போதர் நிருபர்களிடம் கூறுகையில்,
சட்டசபையில் நவ நிர்மாண் சேனா எம்எல்ஏக்கள் யாரும் அத்துமீறி நடந்து கொள்ளக் கூடாது. சட்டசபை பொருட்கள் எதையும் சேதப்படுத்தக் கூடாது என்று ராஜ் தாக்கரே உத்தரவிட்டு இருந்தார். ஆனால் அபு ஆஸ்மியின் செயல் காரணமாகத்தான் எங்கள் எம்எல்ஏக்கள் அவ்வாறு நடந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டு கொள்கிறோம்.
சட்டசபையில் தவறாக நடந்தற்காகத்தான் மன்னிப்பு கேட்கிறோம். அபு ஆஸ்மிக்கு எதிராக நடந்ததற்காக நாங்கள் மன்னிப்பு கேட்க தயாராக இல்லை. அபு ஆஸ்மியிடம் மன்னிப்பு கேட்கும் கேள்விக்கே இடமில்லை.
எல்லோரும் மராட்டியில் தான் பதவியேற்க வேண்டும் என்று ராஜ் தாக்கரே கூறியிருந்தார். ஆனால், ஆஸ்மி மட்டும் அதை மீறியதால் எங்கள் எம்எல்ஏக்கள் உணர்ச்சிவசப்பட்டுவிட்டனர்.
எங்கள் கட்சியின் சட்டசபைத் தலைவர் பாலா நந்த்கோவன்கர் இது தொடர்பாக இன்று சட்டசபையில் மன்னிப்பை பதிவு செய்வார் என்றார்.
ஆஸ்மியின் கடை மீது தாக்குதல்
இந் நிலையில் ராஜ் தாக்கரே கட்சியினர் மும்பையில் உள்ள அபு ஆஸ்மியின் செருப்புக் கடையை தாக்கி சேதப்படுத்தியுள்ளனர்.
தெற்கு மும்பையில் கொலாபாவில் ஆஸ்மிக்குச் சொந்தமான செருப்புக் கடை உள்ளது.
அங்கு திடீரென வந்த ஒரு கும்பல் கடை மீது சரமாரியாக கற்களை வீசித் தாக்கியது. இதில் கடையின் கண்ணாடிகள் உடைந்து சிதறின. பின்னர் அக்கும்பல் தப்பி ஓடி விட்டது.
இந்தக் கும்பலில் இருந்தவர்கள் ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவினர் என்று ஆஸ்மி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை போலீஸ் கமிஷனர் விஸ்வாஸ் நாங்ரே கூறுகையில், கொலாபாவில் உள்ள சிட்டி வாக் ஷூ கடையில் சிலர் புகுந்து கற்களை வீசித் தாக்கினர். இதில் கண்ணாடிகள் உடைந்து சிதறின. இருப்பினும் யாரும் காயமடையவில்லை என்றார் அவர்.