ஆஸி. அகதிகள் கப்பல் நிற்பதில் ஆட்சேபனை இல்லை- இந்தோனேசியா
ஜகார்தா: 78 இலங்கைத் தமிழர்கள் அடங்கிய ஆஸ்திரேலிய கப்பல் இந்தோனேசியாவில் தொடர்ந்து நிற்பதற்கு ஆட்சேபனை இல்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவை நோக்கி படகில் வந்த 78 இலங்கைத் தமிழர்கள் கடலில் தத்தளித்தனர். இதையடுத்து அங்கு விரைந்து சென்ற ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை மீட்டு, ஓசியானிக் வைகிங் என்ற தங்களது ரோந்துக் கப்பலில் ஏற்றி அவர்களை இந்தோனேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
தற்போது இந்தக் கப்பல் இந்தோனேசியாவின் பின்டன் தீவுப் பகுதியில் நிற்கிறது. ஆனால் அதிலிருந்து இறங்க மறுத்து வருகின்றனர் இலங்கைத் தமிழர்கள். இது தொடர்பாக பெரும் குழப்பம் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், இவர்களை நாடு கடத்தப் போவதாக இந்தோனேசிய அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் இந்தக் கப்பல் மேலும் சில நாட்கள் இங்கு நிற்க அனுமதிப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்று இந்தோனேசியா தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தோனேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் தெகு பைசாஸ்யா கூறுகையில், அகதிகள் கப்பல் மேலும் சில நாட்கள் இந்தோனேசிய கடற்பகுதியில் நிற்க வேண்டும் என ஆஸ்திரேலியா விரும்பினால் தாராளமாக நீட்டிப்பு விண்ணப்பம் அளிக்கலாம். நிற்பதற்கான அனுமதியை நீட்டிப்பதில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
எங்களது ஒரே கோரிக்கை என்னவென்றால் இந்தப் பிரச்சினையை விரைவில் ஆஸ்திரேலியர்களும், இலங்கையர்களும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் என்றார்.
இதற்கிடையே, பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு இந்தத் தமிழர்களை அனுப்ப முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒரு திட்டம் இருப்பதாக எங்களுக்குத் தகவல் இல்லை என்று பிலிப்பைன்ஸ் கூறியுள்ளது. அதேபோல இலங்கைத் தமிழர்களை ஏற்கும் எண்ணம் இல்லை என்று நியூசிலாந்தும் கூறி விட்டது.












Click it and Unblock the Notifications