மாத இறுதியில் பொன்சேகா ராஜினாமா?-அரசியலில் குதிக்கிறார்!
கொழும்பு: அரசியல் குதிப்பதற்காகவும், அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு வசதியாகவும், தனது கூட்டுப் படைத் தலைவர் பதவியை இந்த மாத இறுதியில் சரத் பொன்சேகா ராஜினாமா செய்யலாம் என்று தெரிகிறது.
ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் முரட்டுத்தனமாகவும், மூர்க்கத்தனமாகவும் தமிழர்களை கொத்துக் கொத்தாக அழித்த ராணுவத்தின் தளபதியாக இருந்தவர் பொன்சேகா.
போருக்குப் பின்னர் அவரை ராஜபக்சே சகோதரர்கள் ஒதுக்கி ஓரம் கட்டி, கூட்டுப் படைத் தலைவர் என்ற உப்புச் சப்பில்லாத பதவியில் அமர்த்தி விட்டனர்.
இதனால் கடும் அதிருப்தியில் உள்ள பொன்சேகாவை எதிர்க்கட்சியினர் வலை விரித்து தங்களது பக்கம் இழுக்கத் தொடங்கியுள்ளனர். அவரை அதிபர் தேர்தலி்ல பொது வேட்பாளராக நிறுத்த தீர்மானித்துள்ளனர். இந்த முயற்சிக்கு பொன்சேகாவும் உடன்பட்டுள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் சிங்கப்பூரில் வைத்து ரணில் விக்கிரமசிங்கேவுடன் ரகசியப் பேச்சும் நடத்தியுள்ளார் பொன்சேகா.
இதற்கிடையே, அரசியலில் குதிப்பதற்கு வசதியாக தான் வசித்து வரும் கூட்டுப் படைத் தலைவர் பதவியை இந்த மாத இறுதியில் ராஜினாமா செய்ய பொன்சேகா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
என் இஷ்டத்திற்கு முடிவெடுக்க உரிமை உண்டு - பொன்சேகா
தேர்தலில் போட்டியிடப் போகிறீர்களா என்று பொன்சேகாவிடம் கேட்டபோது, எனது சுதந்திரத்திற்கு ஏற்ற வகையில் எந்தவொரு முடிவையும் எடுக்க முடியும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அரசியல் தலைவர்கள் சாதகமாக பயன்படுத்திக் கொள்ளாமல் விடுவார்கள் என்றால், சமூக சேவையாற்றும் பொருட்டு எனது ராணுவச் சீருடையை கழற்றி வைப்பதற்கு தயாராக உள்ளேன்.
அரசியலில் ஈடுபட வேண்டாம் என யாரும் எனக்கு அழுத்தம் கொடுக்க முடியாது. அதேபோல, அரசியலில் ஈடுபடுமாறும் யாரும் என்னை நெருக்க முடியாது.
எனது விருப்பத்தின் அடிப்படையில் எந்தவொரு செயலையும் செய்யத் எனக்கு முழு உரிமையும் உண்டு என்று கூறியுள்ளார் பொன்சேகா.












Click it and Unblock the Notifications