கருணாநிதி வீடு முற்றுகை-அதிமுக எச்சரிக்கை
சென்னை: திருவிழாக்களில் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து நகைகளை கொள்ளையடிப்பது போல இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி என்று அதிமுக கூறியுள்ளார்.
கேஸ் சிலிண்டருக்கு அளிக்கப்பட்டு வந்த மானியத்தை ரத்து செய்தது, 10 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்காதது ஆகியவற்றை கண்டித்து வட சென்னை மாவட்ட அதிமுக சார்பில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன் அதிமுக மாவட்டச் செயலாளர் சேகர்பாபு முன்னிலையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அதில் பேசிய அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் மைத்ரேயன்,
இலவசத் திட்டங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி கருணாநிதி ஆட்சிக்கு வந்துள்ளார். மக்களின் பிரச்சனைகளை பற்றி சிந்திக்காமல் தமிழ் செம்மொழி மாநாடு நடத்த இடம் தேடவும், கதை வசனம் எழுதவும் பயணம் மேற்கொள்கிறார்.
தமிழகத்தை வரலாறு காணாத வகையில் மழை-வெள்ளம் பாதித்துள்ள நிலையில் அரசு உடனடி நிவாரண நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை.
2005ம் ஆண்டு வெள்ளச் சேதம் ஏற்பட்டபோது அப்போதைய முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் போர்க்கால நடவடிக்கை எடுத்து மக்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.
ஆனால் இப்போது ஒரு ஆட்சி நடப்பதாகவே தெரியவில்லை. தமிழகத்தில் ஒரு சிலிண்டர் வைத்திருப்போருக்கு மானியத்தை கருணாநிதி ரத்து செய்துள்ளார். அதற்கு பல்வேறு காரணங்களை அவர் கூறி வருகிறார்.
விலைவாசி உயர்வு காரணமாக அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்து விட்டன. இதைத் தடுக்க தவறிய கருணாநிதியின் கோபாலபுரம் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும்.
புதிய எரிவாயு சிலிண்டர் வாங்குபவர்கள் இரண்டரை மாத காலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எல்லா வகையிலும் மக்கள் விரோத ஆட்சி நடத்தி வரும் கருணாநிதியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.
ஏழை, எளிய மக்கள் நிம்மதியோடும், மகிழ்ச்சியோடும் வாழ மீண்டும் புரட்தித் தலைவி அம்மாவின் ஆட்சி மலரும் என்றார்.
சேகர்பாபு பேசுகையில்,
இலவச கேஸ் இணைப்பு தருவதாக மக்களை ஏமாற்றுகிறார்கள். 70 நாட்களுக்கு ஒரு சிலிண்டர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் ஏற்கனவே வழங்கப்பட்ட 10 லிட்டர் மண்ணெண்ணெயும் குறைக்கப்பட்டுவிட்டது. இதை மீண்டும் வழங்க வேண்டும்.
திருவிழாக்களில் குழந்தைகளுக்கு பஞ்சு மிட்டாய் வாங்கிக் கொடுத்து நகைகளை கொள்ளையடிப்பது போல இலவசங்களை அறிவித்து மக்களை ஏமாற்றி வருகிறார் கருணாநிதி.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மோசமாகி விட்டது. தொழிலதிபர்களுக்கும் பாதுகாப்பில்லை தொழிலாளிகளுக்கும் பாதுகாப்பில்லை. போலீசாருக்கும் பாதுகாப்பில்லை. ஏன் விலங்குகளுக்கு கூட பாதுகாப்பில்லை என்றார்.