மும்பையைத் தாக்கவில்லை ஃபியான் புயல் - தொடர்ந்து கனமழை

அரபிக் கடலில் உருவான ஃபியான் புயல் இன்று மாலை அலிபாக், மும்பை இடையே கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் மும்பை நகரில் பலத்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. அலுவலகங்களும் மதியத்திற்கு மேல் மூடப்பட்டன. கடற்படை தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பலத்த மழையுடன், புயல் காற்றும் மும்பை நகரை மிரட்டி வந்தது. இந்த நிலையில் தற்போது புயல், மும்பையை விட்டு விலகியுள்ளது. இதனால் மும்பைக்கு புயல் அபாயம் நீங்கியுள்ளது. அதேசமயம், அங்கு தொடர்ந்து கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தற்போது புயல் வடக்கு மகாராஷ்டிரா மற்றும் தெற்கு குஜராத்தை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் இது வலுவிழந்த தீவிர காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி விடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை முதலே மும்பையில் பெரும் மழை பெய்து வருவதால் நகரில் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.
ஒர்லி, பந்த்ரா, ஜூஹு, வெர்சோவா, மலத் பகுதிகளில் வெள்ள மீட்புப் படையினர் ஆயத்த நிலையில் வைக்கப்பட்டிருந்தனர்.
புயல் காரணமாக அரபிக் கடலில் உள்ள ஓ.என்.ஜி.சியின் எண்ணெய் துரப்பன மேடையில் பணிகள் நிறுத்தப்பட்டு அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் கரைக்கு அழைத்து வரப்பட்டுவிட்டனர்.












Click it and Unblock the Notifications