ரோடும் இல்லை...நடக்க பாதையும் இல்லை-வைகோ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் முழுவதும் பெய்து வரும் பெருமழையால், இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள மண் சரிவாலும், பலர் உயிரிழந்துள்ளனர்.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாத காரணத்தால், வழக்கம் போல இந்த ஆண்டும் மக்கள் முடங்கிக் கிடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் பிளாஸ்டிக் குப்பைகள் கால்வாய்களை அடைத்துக் கொள்வதால், லேசாக மழை பெய்தாலே கழிவு நீர் வெளியே வந்துவிடுகிறது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சென்னை நகரில் அனைத்து சாலைகளும் ஒரே நாள் மழையில் குண்டும், குழியுமாகி விட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் துன்பத்துக்கு ஆளாவதுடன், பல மணி நேரம் போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. நடைபாதைகள் இல்லாததால், பாதுகாப்பாக நடப்பதற்கு வழியும் இல்லை.
அரசின் பல்வேறு துறையினர் அடிக்கடி சாலைகளை தோண்டுவதால், மரங்களின் வேர்களை வெட்டி விடுகிறார்கள். எனவே வேர் பிடிமானம் இல்லாமல், தூறல் விழுந்தாலே பல மரங்கள் அடியோடு சாய்கின்றன. அத்தகைய மரங்களை முன்பே கண்டறிந்து அகற்றி இருக்க வேண்டும். உடனடியாக விழக்கூடிய நிலையில் இருக்கின்ற மரங்களை கண்டுபிடித்து அகற்ற வேண்டும்.
மழை வெள்ளத்தால் உயிர் இழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, போர்க்கால அடிப்படையில் உதவிப் பொருள்களை உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.












Click it and Unblock the Notifications