தினகரன் நிலம்-நீதிமன்றத்தில் பரபரப்பான விவாதம்
சென்னை: கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் நிலத்திற்கு உரிமை கோரி 6 விவசாயிகள் பட்டா கோரி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கில் நேற்று உயர்நீதிமன்றத்தில் சூடான விவாதம் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், காவேரிராஜபுரத்தில் தங்களுக்குச் சொந்தமான நிலத்துக்கு பட்டா வழங்கக் கோரி 6 பேர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த நிலத்தை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அனாதீனம் என்று தவறாக வரையறுத்துள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளனர்.
இந்த மனு நீதிபதி கே.சுகுணா முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை நடத்திய நீதிபதி சுகுணா, இதுதொடர்பாக தற்போதுள்ள நிலையே நீடிக்க வேண்டும்.
மனுதாரர்கள் அளித்த மனுக்கள் தொடர்பாக சட்டப்படி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அதேசமயம், இந்த நிலம் சர்ச்சைக்குரியது என்று தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது உத்தரவில் நீதிபதி கையெழுத்திடவில்லை.
இந்த நிலையில்,இந்த வழக்கில் தங்களையும் இணைக்கக் கோரி தன்னார்வ அமைப்புகள் உள்பட 5 மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுவில், கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த நிலத்தை ஆக்கிரமித்துள்ளதாக பிரச்னை எழுந்துள்ளது. அதுகுறித்து தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு விசாரணை நடத்தி வருகிறது. எனவே, இந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் மீது நேற்று விசாரணை நடந்தது. அப்போதுகாவேரிராஜபுரம் விவசாயிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என். ஆர். சந்திரன் வாதிடுகையில்,
இந்த வழக்கு தொடர்பாக வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், முடிந்துபோன வழக்கில் தங்களை இணைக்குமாறு மனுதாரர்கள் கோர முடியாது.
இவ்வழக்கில் எங்களுக்கு சொந்தமான நிலத்திற்கு பட்டா வழங்குமாறு மட்டுமே கோரப்பட்டுள்ளது. நீதிபதி தினகரன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
உச்ச நீதிமன்ற நீதிபதியை நியமிக்கும் அதிகாரம் நீதிபதிகள் குழுவுக்கு மட்டுமே உள்ளது என்றார்.
தன்னார்வ அமைப்புகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு, காவேரிராஜபுரம் நிலம் தொடர்பான உண்மைகளை மறைத்து உத்தரவு பெறப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவில் நீதிபதி கையெழுத்திடவில்லை. எனவே, இந்த வழக்கை இன்னும் தீர்க்கப்படாத வழக்காகவே கருத வேண்டும் என்றார்.
இதையடுத்து இன்று விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. இன்றும் வாதம் நடைபெறுகிறது.
நீதிபதிகள் மீதான புகார்கள்-விசாரிக்க சட்டம்:
இதற்கிடையே, நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க வகை செய்யும் விதத்தில் புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படும் என மத்திய சட்டத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.
இதுகுறித்து டெல்லியில், அவர் கூறுகையில், இந்த மசோதா சட்டமானால் நீதிபதிகள் மீதான புகார் மீது நடவடிக்கை எடுக்க வழி ஏற்படும். நீதிபதிகளின் தரம் மற்றும் பொறுப்பேற்பு மசோதா என இதற்கு பெயரிடப்பட்டுள்ளது.
இந்த மசோதா ஒருதரப்பானதாக இல்லாமல் நீதிபதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதிலும் கவனம் செலுத்தப்படும். இதன் மூலம் இந்த சட்டத்தை தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்காது.
இந்த மசோதாவுக்கு நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்ததும் 1968ம் ஆண்டின் நீதிபதிகள் விசாரணை சட்டம் ரத்தாகிவிடும். இந்த சட்டமானது நீதிபதிகளுக்கு எதிரான கண்டனத் தீர்மான நடவடிக்கை சார்ந்ததாகவே உள்ளது. எனவே பல்வேறு அம்சங்கள் அடங்கியதாக மசோதா அமையும்.
சமீப காலத்தில் நீதிபதிகள் நடத்தை, செயல்பாடு குறித்து பாதகமான செய்திகள் நிறைய வருகின்றன. அந்த குறைகளை தீர்க்க எடுக்கப்படும் நடவடிக்கைகளாலும் போதிய பலன் கிடைப்பதில்லை.
இந்த பின்னணியில் உலக அளவில் இந்த விவகாரத்தில் கிடைத்த அனுபவங்களை கருத்தில் கொண்டு புதிய மசோதா வகுக்கப்படுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் போன்ற நாடுகளின் அனுபவங்களும் இந்த மசோதா தயாரிப்பில் கருத்தில் கொள்ளப்படும். நீதித்துறை முழுமையும் இந்த மசோதா வரம்பில் கொண்டுவரப்படும்.
மத்திய அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்படும்
முன் பல்வேறு அமைச்சகங்களுக்கு அனுப்பி இது குறித்து கருத்து அறியப்படும். நீதிபதிகள் சொத்து அறிவிப்பு தொடர்பான மசோதாவில் உள்ள அம்சங்களும் இதில் இடம் பெறும். நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கும் இந்த மசோதா அனுப்பி வைக்கப்படும். நீதித்துறையுடன் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர் கவுன்சில், வழக்கறிஞர் சங்கங்களின் ஆலோசனைகளும் பெறப்படும் என்றார்.