தூற்றுவோர் தூற்றட்டும் - கவலையே பட மாட்டோம்: கருணாநிதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: யார் என்ன சொன்னலாலும் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல், போற்றுவோர் போற்றட்டும், புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் என்ற மொழிக்கேற்ப வெள்ள நிவாரணப் பணிகளில் செயல்படுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடித நடை அறிக்கை:

தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகள் குறித்து ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதே தவிர, நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று ஒரு குற்றச்சாட்டு கழக அரசு மீது சொல்லப்பட்டுள்ளது.

பொதுவாக புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், சுனாமி, நில நடுக்கம் போன்ற பேரிடர்கள் நேரும்போது கட்சி அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களின் நல்வாழ்வு கருதி; அவர் தம் துயர் துடைத்திட அனைத்து கட்சியினரும் ஈடுபடுவதுதான் மனித இயல்பு. அதுதான் நேரம் என்று கருதிக்கொண்டு ஆளுங்கட்சியைக் குறை கூறுவதிலும், அதிலே இன்பம் காண்பதிலும் நேரத்தைச் செலவழிக்கக் கூடாது.

திமுக தமிழகத்திலே எதிர்க்கட்சியாக இருந்த போது, 1952ம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் வீசிய புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கழகத்தின் சார்பில் நிதி திரட்டி, அந்த பணத்தைக் கொண்டு கைத்தறி வேட்டி, சேலைகள் வாங்கி, ஏழையெளியோர்க்கு வழங்குவதெனவும், அதற்கென இருபத்தி ஐயாயிரம் (அப்போது அது பெரிய தொகை) ரூபாய் நிதி திரட்டுவதெனவும், அந்த பணிக்கு என்னைத் தலைவனாக இருக்குமாறும் திமுக தீர்மானம் நிறைவேற்றியது.

நிதி திரட்டும் முயற்சிக்கு பல இடங்களில் நான் எழுதிய "தூக்குமேடை'' நாடகம் நடத்தப்பட்டது. அந்த நாடகத்தில் பாண்டியன் என்னும் பள்ளி மாணவன் வேடத்தில் நானும், அபிநயசுந்தரர் என்னும் வேடத்தில் நடிகர் திலகம் சிவாஜியும், பரமார்த்திகன் வேடத்தில் நண்பர் சி.வி.எம்.அண்ணாமலையும் மற்றும் சகோதரர் அரங்கண்ணல் அவர்களும், கழக முன்னணியினரும் நடித்தோம். கழக நிதிக்காக நடைபெற்ற அந்த நாடகங்களில் நடித்ததற்காக நடிகர் திலகம் தனக்கென ஊதியம் எதுவும் பெற மறுத்துவிட்டார்.

25 ஆயிரம் ரூபாய் புயல் நிவாரண நிதி வசூலிக்க வேண்டும் என்று திமுக செயற்குழு முடிவெடுத்திருந்த போதிலும், 35 ஆயிரம் ரூபாய்க்கு மேற்பட்ட தொகை வசூலானது. அந்த தொகைக்கு கைத்தறித் துணிகள் வாங்கப் பெற்று, அவைகளை, அரசாங்க சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்குமாறு கேட்டுக்கொண்டு, 18.6.1954 அன்று காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப்பட்டது.

11.12.1955 அன்று "திராவிடநாடு'' இதழில் அண்ணா எழுதிய கடிதத்தின் ஒரு பகுதி

இதோ:

"தம்பி, எந்த பிரச்சனையும் நினைவிற்கு வரவில்லை; நெஞ்சமெலாம் துக்கம் துளைத்தெடுக்கிறது. இமை திறந்திருப்பினும் மூடிக்கிடப்பினும், எதிரே தெரிவதெல்லாம்; பேய் மழை, சூறைக்காற்று, கடற்கொந்தளிப்பு, பிணக்குவியல், அழிவு, அழிவு!.

தம்பி, நமது முதல்வர், காமராஜர், பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருக்கிறார்! பொறுப்புணர்ந்த ஆட்சி முதல்வர், இருக்க வேண்டிய இடம்! ஆம், அங்கு பெரிய அதிகாரிகள் புடை சூழ இருக்கிறார். பெரு நாசத்துக்கு ஆளான மக்களின் கண்ணீரைத் துடைத்திடும் காரியத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார் என்பதை எண்ணும்போது, கொந்தளித்தெழுந்த கொடுங்கடலே, குடும்பங்களை அழித்த பேய்க்காற்றே, இதோ எமக்கு ஆறுதல் அளிக்க, எமது முதல்வர் வந்துள்ளார், எமது கண்ணீரை காணுகிறார் - தமது கண்ணீரைச் சிந்துகிறார்- அழிவு சூழ் இடங்களில் ஆறுதலை அள்ளித் தருகிறார்.

முதல்வர் காமராஜரின் பொறுப்புணர்ச்சி கண்டு நாம் பெருமைப்படுகிறோம். அளவு குறைவு - முறை குறையுடையது என்று நிபுணர்கள் பேசக் கூடும். ஆனால் முதல்வரின் இதயம் தூய்மையானது, ஏழை எளியோர்பால் அவர் இது சமயம் காட்டிய அக்கறை தூய்மையானது என்பதை, எவரும், எந்நாளும் மறந்திட மாட்டார்கள். அனைவரும் பணியாற்றித் தீர வேண்டிய கட்டம்.

இன்றே துவக்குக! என்று வேண்டுகிறோம். திமுக தோழர்களிடமிருந்து எத்தகைய ஒத்துழைப்பு கேட்பினும், கிடைக்கும் என்று உறுதி அளிக்கிறோம். தேம்பித் திகைத்துக் கிடக்கும் தோழர்களே! உடன் பிறந்தோரே! இதோ உதவி, இதோ, இதோ என்று கூறிப் புறப்படுக; பணி புரிக!''.

உடன்பிறப்பே, அப்போது திமுக எதிர்க்கட்சியாக இருந்த நிலையில் ஏற்பட்ட அழிவிற்காக அகமகிழ்ந்து ஆளுங்கட்சியின் மீது பழியை தூற்றாமல் அண்ணா அவர்கள் எந்த அளவிற்கு பெருமையோடு முதல்வர் காமராஜரைப் பாராட்டி எழுதியிருக்கிறார் என்பதையும்; கழகத்தினரும் கட்சி வேறுபாடு கருதாமல்; வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடவேண்டும் என்றும் அண்ணா அவர்கள் கேட்டுக்கொண்டு, அவ்வாறே கழகத்தினர் காங்கிரஸ் ஆட்சியுடன் ஒத்துழைத்து துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபட்டனர் என்பதையும் எண்ணிப்பார்க்கிறேன்.

ஆனால் இப்போது என்ன நிலை? 2005ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, அனைவருக்கும் தலா 2000 ரூபாய் வீதம் நிவாரணத்தொகை வழங்கப்பட்டதாகவும், கழக ஆட்சியில் எதுவும் செய்யப்படாத நிலை இருப்பதைப் போலவும் அறிக்கை விடுத்துப் பெருமைப்பட்டுக்கொள்கிறார்கள். அதில் பெருமைப்பட ஒன்றுமில்லை. ஓர் அரசு செய்ய வேண்டிய கடமைதான் அது. என்றாலும் அப்போது அந்த 2000 ரூபாய் எப்படி, எதற்காக கொடுக்கப்பட்டது என்பதை தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

சென்னை மாநகரில் பல மாடிக் கட்டிடங்களில் உயர்ந்த இடங்களில் மழையினால் சிறிதளவு கூட பாதிக்காதவர்களுக்கெல்லாம்கூட அப்போது 2000 ரூபாய் வீதம் அந்த தொகை வழங்கப்பட்டது. சென்னை மாநகருக்காக என்று மட்டும் அப்போது 148 கோடி ரூபாய் நிவாரண நிதியாக ஒதுக்கப்பட்டது.

2006ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2008ம் ஆண்டு "நிஷா'' என்று சொல்லப்பட்ட புயல்- பெரு மழை பெய்தபோது நிவாரணத் தொகை வழங்கப்படவில்லையா என்பதையும் நான் ஒப்பிட்டுக் காட்ட விரும்புகிறேன்.

தமிழகத்தில் 2005ம் ஆண்டில் வட கிழக்கு பருவமழை காலத்தின்போது நான்குமுறை பெருமழை பெய்து, அதிலே 22 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது போல, 19.11.2008 முதல் 28.11.2008 வரை வடகிழக்கு பருவமழை அதிகமாகப் பெய்தமையாலும், நிஷா' புயலாலும், 12 மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொண்டதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவைப்படும் அவசர உதவிகளையும் கழக அரசு அப்போது வழங்கியது.

இப்பணிகளை மேற்பார்வையிட, அன்றைய ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைத் துணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களைத் தமிழக அமைச்சர்கள் நேரில் பார்வையிட்டு நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. 7.12.2008 அன்று இந்த 12 மாவட்டங்களின் ஆட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி வெள்ளத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து நான் ஆய்வு செய்தேன். 2005ம் ஆண்டு இதைவிட பெரிய வெள்ளச் சேதம் ஏற்பட்டபோது, அதற்காக மாவட்ட ஆட்சி தலைவர்கள் கூட்டம் எதையும் கூட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2005ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது உயிரிழந்த குடும்பத்தினருக்கு, அப்போது தலா 50 ஆயிரம் ரூபாய் வீதம் நிவாரணமாக வழங்கப்பட்டது. அப்படி ஐம்பதாயிரம் ரூபாய் மட்டுமே அப்போது வழங்கியவர்கள்தான் இப்போது நமது ஆட்சியில் தலா ஐந்து லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென்று பரிந்துரை செய்கிறார்கள்.

2005ம் ஆண்டில் 1,520 கால்நடை உயிரிழப்புகள் ஏற்பட்டு, 86 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டதற்கு மாறாக, 2008ம் ஆண்டு தி.மு. கழக ஆட்சியில் 5,982 கால்நடை இழப்புகள் ஏற்பட்டு, நிவாரணமாக 1 கோடியே 79 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

குடிசைகள் இழப்புக்காக 2005ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 93 கோடியே 7 இலட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டது. 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் 231 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

மழையினால் பாதிக்கப்பட்ட மற்றும் வெள்ளம் சூழ்ந்த வீடுகளுக்கு சிறப்பு நிவாரண உதவியாக, 2005ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 22 மாவட்டங்களில் 466 கோடியே 97 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதென்றால், 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில், 12 மாவட்டங்களில் மட்டும் 402 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

பயிர்ச் சேதம் என்ற வகையில் 2005ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 368 கோடி ரூபாய் வழங்கப்பட்டதற்கு மாறாக 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில் 388 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. மேற்கூறிய அனைத்து நிவாரண உதவிகளையும் சேர்த்து, 2005ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் 931 கோடி ரூபாய் 22 மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்காக வழங்கப்பட்டதென்றால், 2008ம் ஆண்டு 12 மாவட்டங்களில் ஏற்பட்ட இழப்புகளுக்காக மட்டும் 1,027 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்பதை நினைவிலே கொண்டால், வெள்ள நிவாரணப் பணிகளில் திமுக ஆட்சி யாருக்கும் சளைத்ததல்ல என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பயிர்ச் சேதத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ள நெறிமுறைகளின்படி எக்டேர் ஒன்றுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரண உதவி என்பதற்கு மாறாக, 2008ம் ஆண்டு திமுக ஆட்சியில், அதனை உயர்த்தி ஹெக்டேர் ஒன்றுக்கு 7 ஆயிரத்து 500 ரூபாய் என்று வழங்கப்பட்டது. மேலும் கழக அரசில் 2006-2007ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு, நடைமுறையில் இருந்துவரும் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்படி பதிவு செய்து கொண்ட விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட ஒவ்வொரு எக்டேருக்கும் 10 ஆயிரம் ரூபாய் வரையில் நிதி உதவியும் அளிக்கப்பட்டது.

எனவே நம்மைப் பற்றியும், நமது அரசைப் பற்றியும் குறை கூறுவோரைப் பற்றிக் கவலைப்படாமல் நாம் மக்களுக்காக தொடர்ந்து துயர் துடைப்புப்பணிகளிலே ஈடுபடவேண்டும். சென்னை மாநகரிலும், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் பெருமழை பெய்ததாக 7.11.2009 அன்று செய்தி வந்ததும் அன்றைய தினம் சனிக்கிழமை விடுமுறை என்ற போதிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளையெல்லாம் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வரச் சொல்லி விட்டு நானும் காலை 9.30 மணிக்கெல்லாம் அலுவலகத்திற்கு சென்றுவிட்டேன்.

எனக்கு முன்பாகவே துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மேயரையும், மாநகராட்சி ஆணையர் மற்றும் அதிகாரிகளையும் அழைத்துக் கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கெல்லாம் நேரில் சென்று பார்வையிட்டு, அவற்றையெல்லாம் குறிப்பெடுத்துக் கொண்டு தலைமைச் செயலகத்திற்கு வந்துவிட்டார்.

தலைமைச் செயலாளர் மாவட்ட ஆட்சியர்களோடு "வீடியோ கான்பரன்சிங்'' மூலமாக தொடர்பு கொண்டு முழு விவரங்களோடு வந்திருந்தார். அனைவரும் கலந்து பேசி நிவாரணப் பணிகளில் போர்க்கால அடிப்படையிலே ஈடுபட வேண்டுமென்று தெரிவித்து விட்டுத்தான் மதிய உணவுக்கு நேரம் கடந்து இல்லம் திரும்பினேன்.

அன்று ஒரு நாள் மாத்திரமல்ல, மழை பல பகுதிகளிலே தொடர்ந்ததால் 8.11.2009 அன்று ஞாயிற்றுக்கிழமை என்ற போதிலும் தலைமைச் செயலகம் சென்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளையெல்லாம் அழைத்து வெள்ள நிவாரணப் பணிகளின் முன்னேற்றம் எப்படியென்று விவாதித்ததோடு மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும் விவாதித்தேன்.

எந்தெந்த மாவட்டங்களில் பாதிப்புகள் ஏற்பட்டதோ அங்கெல்லாம் அந்தந்த மாவட்ட அமைச்சர்களை நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தினேன். இந்த புயல் மழை காரணமாக, நீலகிரி மாவட்டம் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது, போக்குவரத்து இல்லாத நிலையில் உள்ளது, நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது, 40 பேருக்கு மேல் உயிரிழந்து விட்டார்கள் என்றெல்லாம் வந்த செய்தியைத் தொடர்ந்து 10.11.2009 அன்று காலையில் தலைமைச் செயலகம் சென்று அனைவரோடும் விவாதித்த பிறகு வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டியையும்,

சிறு தொழில் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிசாமியையும் நீலகிரி மாவட்டத்திற்கு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிடவும், நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும் விரைந்து சென்றிடுமாறு கூறி அனுப்பி வைத்தேன். அவர்களும் அவ்வாறே சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்த்து விட்டு அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்றிரவு 10 மணி அளவில் என்னோடு தொலைபேசியில் தொடர்பு கொண்டு நிலவரங்களை எடுத்துக் கூறினார்.

அந்த மாவட்ட அமைச்சர் ராமச்சந்திரனும், பக்கத்து மாவட்ட அமைச்சரான வெள்ளக்கோவில் சாமிநாதனும், மத்திய மந்திரியும், அந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவும் அங்கேயே தங்கி நிவாரணப் பணிகளிலே ஈடுபட்டுள்ளார்கள்.

எனவே "போற்றுவோர் போற்றட்டும், புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும், என் கடன் பணி செய்து கிடப்பதே'' என்ற மொழிக்கிணங்க யார் என்ன சொன்னபோதிலும், அதைப்பற்றி கவலைப்படாமல் நம்முடைய பணிகளை தொடருவோம். மக்கள் நம்மை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நம்மைப் பழி கூறி வரும் அறிக்கைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை; நீயும் அதுபற்றி கவலைப்படாமல் துயர்படும் மக்களின் கண்ணீர் துடைத்திடுக! கடமை தொடர்ந்திடுக என்று கூறியுள்ளார் கருணாநிதி.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+