தமிழகத்தில் நக்சல் ஊடுருவல்?-மேற்கு தொடர்ச்சி மலையில் அதிரடிப்படை வேட்டை
மேற்கு வங்கம், சட்டிஸ்கர் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் நக்சலைட்டுகள் தேடுதல் வேட்டை தீவிரமாகியுள்ளதால் ஆந்திரா, கேரளா வழியாக அவர்கள் தமிழகத்திற்குள் நுழைவதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஈரோடு, தேனி, நெல்லை மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லூர், புளியங்குடி மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழக சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் மலைப்பகுதியில் முகாமிட்டு அதிரடி சோதனை நடத்தி வந்தனர்.
தற்போது தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வரலாறு காணாத மழை பெய்ததால் அங்கிருந்து நக்சலைட்டுகள் நெல்லை, விருதுநகர், கன்னியாகுரி மாவட்ட மலைப் பகுதிகளுக்கு இடம் பெயர்ந்திருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
இதைத் தொடர்ந்து தமிழக சிறப்பு அதிரடி படை வாசுதேவநல்லூரில் இருந்து மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் சென்று நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து கேரள மாநிலம் மேற்கு, வடக்கு பகுதி எல்லை வரை இந்த தேடுதல் பணி நடக்கும் என்று தெரிகிறது.