கடும் எதிர்ப்பு-பாதியி்ல் நாடு திரும்பிய ராஜபக்சே தங்கை
திருச்சி: தொடர்ந்து கருப்புக் கொடி போராட்டங்களை தன்னைத் துரத்தி வந்ததால் தனது தமிழக பயணத்தை ரத்து செய்து விட்டு நாடு திரும்பி விட்டார் ராஜபக்சேவின் சகோதரி நிரூபமா.
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் சித்தப்பா மகள் நிரூபமா ராஜபக்சே. இவர் தனது கணவர் திருக்குமரன் நடேசனுடன் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். பலத்த பாதுகாப்புக்கு மத்தியில், திருச்செந்தூரில் யாகம் ஒன்றில் இவர்கள் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் ராமேஸ்வரம் கோவிலுக்குச் சென்றனர். அங்கு நாம் தமிழர் இயக்கம், மதிமுக சார்பில் கருப்புக் கொடி காட்டிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு செல்ல நிரூபமா தம்பதிகள் முடிவு செய்திருந்தனர். இதற்காக திருச்சிக்கு வந்தனர்.
மத்திய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஹோட்டலில் நிருபமா ராஜபக்சே தனது கணவருடன் தங்கி இருந்தார். ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
இந்த நிலையில் திருச்சியில் நிருபமா ராஜபக்சேவுக்கு கறுப்பு கொடி காட்டப்போவதாக பல்வேறு அமைப்புகள் அறிவித்தன. இதையடுத்து ஹோட்டலுக்குப் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.
ஆனால் போலீஸ் வலையையும் மீறி, நேற்று காலை சுமார் 7 மணிக்கு திருச்சி மத்திய பஸ்நிலையம் பெரியார் சிலை முன்பு புதிய தமிழகம் கட்சியினர் திரண்டனர். அவர்களில் 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதே போல பெரியார் சிலை அருகேயும், மெக் டொனால்டு ரோடு பகுதியிலும், மாவட்ட கோர்ட் முன்பும், விமான நிலைய வாசலிலும் பல்வேறு அமைப்புகள் சார்பாக போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இதனால் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்தார். தனக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடப்பதைத் தொடர்ந்து தனது தமிழக பயணத்தை ரத்து செய்ய தீர்மானித்தார்.
இதையடுத்து நேற்று காலை 9.45 மணிக்கு திருச்சி விமான நிலையம் சென்ற நிரூபமாவும், அவரது கணவரும், காலை 11.05 மணிக்கு கொழும்பு திரும்பினர்.