பிரமிட் சாய்மிராவுக்கு 'செபி' 7 ஆண்டு தடை!
இதனால் இந்நிறுவனப் பங்குகள் இனி பங்குச் சந்தையில் பட்டியலிட முடியாது.
இந்நிறுவனம் பங்கு ஒதுக்கீடு செய்ததில் காணப்பட்ட முறைகேடுகளைக் கண்டறிந்த செபி, அதன் அடிப்படையில் இத் தடையை விதித்துள்ளது.
2006-ம் ஆண்டு பொதுப் பங்கு வெளியீட்டில் நிறுவன ஊழியர்களுக்கு 4,22,200 பங்குகளை ஒதுக்கியதாக தெரிவித்தது. ஆனால் இதில் 98.5 சதவீத பங்குகளை 7 பேருக்கு மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஆனால் இந்த 7 பேரும் நிறுவன ஊழியர்கள் அல்ல. இவர்களுக்கு மாதாந்திர சம்பளம் ஏதும் வழங்கப்படவில்லை. இவர்கள் ஏழு பேருடைய பெயர்களும் வருகைப் பட்டியலிலும் இடம்பெறவில்லை.
மேலும் குறித்த பணிக்கான இவர்களது தகுதி மற்றும் நிறுவனத்தில் இவர்களுக்கு உள்ள அனுபவம் உள்ளிட்ட தகவல் ஏதும் இடம்பெறவில்லை.
இன்னொன்று, இந்த 7 பேரும் நிறுவனத்தில் 2006 ஜூலை முதல் ஆகஸ்ட் வரையான காலத்தில் மட்டும் இருந்துள்ளனர். டிசம்பர் மாதம் ராஜினாமா செய்து விட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது பங்கு 'ஒதுக்கீடு' முடிவடைந்த உடன் அவர்கள் நிறுவனத்திலிருந்து வெளியேறியுள்ளனர்.
எனவே இதில் உள்நோக்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செபியை ஏமாற்றும் நோக்கில் விதிகளைப் பயன்படுத்தி உள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பங்குகள் ஒதுக்கீடு பெற்ற இந்த நபர்களின் உண்மையான வேலை ஜவுளி வர்த்தகம் என்பதும், பங்கு ஒதுக்கீட்டுக்காக இவர்கள் அனைவருமே தங்களது ஜவுளித் தொழிலை விட்டுவிட்டு ஆறுமாத காலம் இந்நிறுவனத்தில் ஊழியர்களாக இருந்துள்ளனர் என்பதும் விசாரணையில் மேலும் வெளிவந்துள்ள உண்மைகள். இந்த ஆறு மாத காலத்தில் மட்டும் இவர்கள் அடைந்த ஆதாயம் ரூ. 2.31 கோடி.