ஜெயலலிதா குரலில் சீமானிடம் பேசிய பலகுரல் நடிகர் கைது
சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேசுவதைப் போல நடிகர்- இயக்குநர்- நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமானிடம் பேசிய பல குரல் மேடை நடிகரை போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் மிரட்டும் தொணியில் பேசவில்லை, விளையாட்டாக பேசியதாக அவர் கூறியதால் பின்னர் அந்த நபர் விடுவிக்கப்பட்டார்.
சென்னையில் உள்ள பல முக்கிய நபர்களுக்கு அடிக்கடி ஜெயலலிதா குரலில் ஒரு மர்ம நபர் தொலைபேசி மூலம் பேசி வந்தார். இதுகுறித்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இந்த நிலையில் இயக்குநர் சீமானுக்கும் இதுபோன்ற தொலைபேசி வந்தது.
இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரனுக்குப் புகார்கள் போயின. உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த விஷமியைப் பிடிக்கும்படி ஆணையர் உத்தரவிட்டார்.
அதன்படி நடந்த வேட்டையில், தற்போது அந்த நபர் சிக்கியுள்ளார்.
இதுகுறித்து ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், வெள்ளிங்கிரி (29) என்பவரை பிடித்து விசாரித்தோம். அவர் பலகுரலில் பேசும் நடிகர் ஆவார். கிராமப்புறங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பல தலைவர்களின் குரல்களில் இவர் பேசியுள்ளார்.
கோவை மாவட்டம் அன்னூர் போலீஸ் சரகத்தில் உள்ள வடக்கலூர் இவரது சொந்த ஊராகும். இவரை பிடித்து விசாரித்தபோது, நான் விளையாட்டாக முன்னாள் முதல்வரின் குரலில் பேசிவிட்டேன் என்றும், அதில் உள்நோக்கமோ, மிரட்டலோ, பணம் சம்பாதிக்கும் குறிக்கோளோ இல்லை என்றும் கூறினார்.
விசாரணையிலும் அது உண்மை என்று தெரிய வந்தது. இதனால் அவரை எச்சரிக்கை செய்து விடுவித்து விட்டோம் என்றார் ராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications