வீட்டுக்குள் புகுந்து குடும்பத்தினரை கட்டிப்போட்டு நகைக் கடையை துளையிட்டு துணிகர திருட்டு
சென்னை: சென்னை அருகே நகைக் கடையை ஒட்டியுள்ள வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை கட்டிப் போட்டு விட்டு, சுவரில் துளையிட்டு நகைக் கடைக்குள் புகுந்து நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது.
குன்றத்தூர் 3-ம் கட்டளையில் தேஜாராம் என்பவருக்கு சொந்தமான நகைகடை உள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் பகல் 12.30 மணிக்கு தேஜாராம் கடையை பூட்டிவிட்டு சென்று விட்டார்.
நகை கடையை ஒட்டி இருக்கும் வீட்டில் பப்பிமா (25) என்பவர் வாடகைக்கு குடியிருக்கிறார். நகைக் கடை சுவரும் வீட்டின் சுவரும் ஒன்று.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் சிலர் பப்பிமா வீட்டுக் கதவதை தட்டியுள்ளனர். அவரும் போய் திறந்துள்ளார். அப்போது வெளியே கடப்பாறையுடன் இருந்த 6 பேர் உள்ளே புகுந்தனர்.
அவர்கள் கத்தியும் வைத்திருந்தனர். கத்தியைக் காட்டி பப்பிமா உள்ளிட்ட வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்களை மிரட்டிய கொள்ளையர்கள், வீட்டில் இருந்த ஆறு பேரின் கால்களையும், கைகளையும் கட்டிப் போட்டனர்.
பின்னர் வீட்டுக்குள் இருந்தபடி நகைகடை சுவரில் துளை போட்டனர். அதன் வழியாக கொள்ளையர்கள் உள்ளே புகுந்து நகைக் கடையில் இருந்த தங்கம், மற்றும் வெள்ளி நகைகளை மூட்டை கட்டி எடுத்தனர்.
மிக புத்திசாலித்தனமாகவும், துணிச்சலாகவும் இந்தக் கொள்ளை நடந்துள்ளது. அதிகாலை 2 மணி வீட்டுக்குள் முகாட்டிருந்த கொள்ளையர்கள் பின்னர் நகைகளுடன் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் நகைகடை அருகில் இருக்கும் டீக்கடைகாரர் ராமச்சந்திரன் கடையை திறக்க வந்தார்.
அப்போது பப்பிமா வீட்டுக்குள் முனகல் சத்தம் கேட்டதும் ஓடிச் சென்று பார்த்தார். பின்னர் அனைவரின் கட்டுக்களையும் அவிழ்த்து விட்டார்.
போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில், கடையில் இருந்து 100 கிராம் தங்க நகைகள் மற்றும் 10 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து இருப்பது தெரிய வந்தது. கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக துப்பு துலக்கி வருகிறார்கள். பப்பிமா குடும்பத்தினர் சொன்ன அடையாளங்களை வைத்து கொள்ளையர்களை தேடிவருகிறார்கள்.












Click it and Unblock the Notifications